காந்தாரா சாப்டர் 1: மூன்று வருட போராட்டம்.. மரணத்திலிருந்து தப்பித்தேன்! ரிஷப் ஷெட்டி உருக்கம்
சென்னை: சில படங்கள் திடீரென வந்து, ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுச் செல்லும். அப்படி, 2022-ல் கன்னடத்தில் வெளியாகி, பிறகு தமிழில் டப் ஆகி தமிழக ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட் அடித்த படம்தான் காந்தாரா. அந்த படம் வெளியாகும் வரை, அதன் ஹீரோ மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால், கே.ஜி.எஃப்-பில் யாஷ் எப்படிப் பிரபலமானாரோ, அதேபோல் இந்தப் படத்தின் மூலம் ரிஷப் ஷெட்டியும் பிரபலமானார்.

காந்தாராவின் வெற்றி மந்திரம்
காந்தாரா படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், அதன் கதை. கர்நாடகாவில் உள்ள காடுகளில் வாழும் பழங்குடியினர் மக்களின் வாழ்க்கை, அவர்களின் நம்பிக்கைகள், காதல், குற்றங்கள், துரோகங்கள், அரசியல் மற்றும் அவர்களின் காவல் தெய்வ நம்பிக்கை ஆகியவற்றை இந்தப் படம் பேசியது. குறிப்பாக, பஞ்சலி என்ற காவல் தெய்வம், ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அந்த மெகா வெற்றிக்கும் அதுவே காரணமாக இருந்தது. ஒரு சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், உலகமெங்கும் சுமார் 400 கோடி வரை வசூல் செய்தது.
இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு, ரிஷப் ஷெட்டி தமிழ்நாட்டுக்கு வந்து புரமோஷன் செய்தார். அப்போது, நடிகர் தனுஷ் உட்பட பல நடிகர்கள் அவரை அழைத்து, படத்தின் வெற்றியைப் பாராட்டிப் பேசினார்கள்.
காந்தாரா சாப்டர் 1 டிரெய்லர்
காந்தாரா படத்திற்குப் பிறகு, அதன் முந்தைய பாகமாக காந்தாரா சாப்டர் 1 உருவாகியுள்ளது. இந்தப் படத்தையும் ரிஷப் ஷெட்டியே இயக்கி நடித்திருக்கிறார். இதில் மதராஸி பட நடிகை ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிரெய்லர் பார்க்கும்போது, இந்தப் படம் பல வருடங்களுக்கு முன்பு கர்நாடக காடுகளில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, அவர்களின் தெய்வ நம்பிக்கை, அவர்களைச் சுரண்டும் மன்னர்கள் ஆகியவற்றை பேசப்போகிறது என்று தெரிகிறது. டிரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி, ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் குறித்த விவாதங்களைத் தூண்டியது.
ரிஷப் ஷெட்டியின் மூன்று வருட உழைப்பு
காந்தாரா சாப்டர் 1 வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் ரிலீஸாகிறது.
படம் பற்றி பேசிய ரிஷப் ஷெட்டி, "காந்தாரா படத்திற்கு இரண்டு வருடங்கள் உழைத்தோம். ஆனால், காந்தாரா சாப்டர் 1 படத்திற்கு மூன்று வருடங்கள் உழைத்திருக்கிறோம்" என்றார். மேலும், "இந்த மூன்று வருடங்கள் என் குடும்பத்தைக்கூட நான் சரியாகக் கவனிக்கவில்லை. தொடர்ந்து மூன்று மாதங்கள் எல்லாம் படக்குழுவினர் சரியாகத் தூங்காமல் இந்தப் படத்திற்காக வேலை செய்தார்கள்" என்றும் கூறினார்.

"டீ கொடுப்பவர் முதல் இந்தப் படத்தில் வேலை செய்த எல்லோருமே இது தங்களின் படமாகக் கருதினார்கள். நான்கைந்து முறை நான் மரணத்திலிருந்து தப்பித்து வந்தேன். நாங்கள் நம்பிய கடவுள் என்னை காப்பாற்றியது. இந்தப் படம் கண்டிப்பாகச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடிக்கும்" என்று நம்பிக்கையுடன் பேசினார். ஷூட்டிங் நடந்தபோது, விபத்துகளில் சிக்கி மொத்தம் 5 பேர் மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
ரிஷப் ஷெட்டியின் இந்த அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை மேலும் தூண்டியுள்ளது. டிரெய்லரில் காணப்படும் பிரம்மாண்டமும், காந்தாரா படத்திற்கு இணையான மெய்சிலிர்க்கும் அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications