கேபிஒய் பாலாவுக்காக மணிமேகலை செய்த உதவி! மனுஷன் மேடையில் கண்கலங்கிட்டாரு! இப்படியும் ஒரு பாசம்!
சென்னை: விஜய் டிவியின் மூலம் சின்னத்திரையில் ரசிகர்களைக் கவர்ந்தவர் கேபிஒய் பாலா. தனது நகைச்சுவை உணர்வு, உதவும் குணம் எனப் பலராலும் பாராட்டப்பட்ட இவர், தற்போது 'காந்தி கண்ணாடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி மணிமேகலை, பாலாவுக்காக ஒரு ரூபாய் கூட வாங்காமல் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார். இதனால், பாலா மேடையில் கண்கலங்கிப் பேசியது, பலரையும் உருக்கியுள்ளது.

சிரிப்பை விதைத்து அன்பை அறுவடை செய்தவன்
'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலா, தனது 'பன்ச்' டயலாக் மற்றும் டைமிங் காமெடியால் ரசிகர்களைக் கவர்ந்தார். பிறகு, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, அவருக்கு மேலும் புகழைப் பெற்றுத் தந்தது. சினிமாவில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்தவர், தற்போது கதாநாயகனாக உயர்ந்திருப்பது அவரது கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசு. நடிப்பில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் அவர் ஒரு ஹீரோதான். தான் சம்பாதிக்கும் பணத்தை, வெள்ளம், புயல் எனப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் செலவழித்து, 'மனிதாபிமானம்' என்றால் என்ன என்பதைத் தனது செயல்களால் உணர்த்தியவர். இதனால், நடிகர் கார்த்தி போன்ற பெரிய நடிகர்களும், பாலாவிடம் நேரடியாகப் பேசிப் பாராட்டியுள்ளனர்.
மணிமேகலை - பாலா நட்பு
விஜய் டிவியில் பல சீசன்களாக 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பயணித்தவர்கள் பாலா மற்றும் மணிமேகலை. இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட பழக்கம், இருவருக்கும் இடையில் ஆழமான நட்பாக மாறியது. கடந்த ஆண்டு, மணிமேகலைக்கும், மற்றொரு தொகுப்பாளினி பிரியங்காவுக்கும் இடையே சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால், மணிமேகலை விஜய் டிவியிலிருந்து திடீரென விலகினார். அப்போது, 'குக் வித் கோமாளி'யில் பழகிய பலர், மணிமேகலைக்கு எதிராக பேசி இருந்தனர். ஆனால், அப்போதும் பாலா மணிமேகலைக்குத் துணையாக நின்று, தனது ஆதரவைக் கொடுத்து வந்தார்.
என் தம்பிக்காக செய்கிறேன்
இப்படிப்பட்ட நட்புக்கு இலக்கணமாக விளங்கும் மணிமேகலை, பாலாவுக்காக ஒரு பெரிய உதவியைச் செய்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் இதுகுறித்து பேசிய பாலா, கண்கலங்கியபடி தனது நெகிழ்ச்சியான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
"இந்த நிகழ்ச்சியை நானே தொகுத்து வணங்குகிறேன். நான் ஒன்னும் பெரிய நடிகன் கிடையாது என்று சொன்னேன். அப்போது, படக்குழுவினர் என்னிடம், 'பாலா, அந்த நிகழ்ச்சிக்கு ஒருத்தர் வருகிறார், பணம் எதுவும் வாங்க மாட்டேன் என்று ஒரே கண்டிஷன் போட்டிருக்கிறார்' என்று சொன்னார்கள். எனக்கு ஒரே ஆச்சரியம், 'நமக்காக யார் அப்படி வருவார்கள்?' என்று கேட்டேன். அதற்கு, 'அவர் மணிமேகலைதான்' என்று சொன்னார்கள்.
அதைக்கேட்டதும் எனக்குக் கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது. 'நான் மணிமேகலையை எதற்காகத் தொந்தரவு செய்ய வேண்டும்?' என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், 'நாங்கள் மணிமேகலையிடம் பேசியபோது, 'எனக்கு பணம் வேண்டாம். என் தம்பிக்காக இந்த நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்குகிறேன். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன், பணம் கொடுத்தால் நான் தொகுத்து வழங்க மாட்டேன்' என்று சொன்னதாகச் சொன்னார்கள்." இன்று பாலா கண்கலங்க பேசிக் கொண்டிருக்கும்போது மணிமேகலையின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து நிற்கிறது. இந்த நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலா பேசிய இந்த வார்த்தைகள், வெறும் நட்பு அல்ல, அது ஒரு சகோதர பாசம் என்பதைக் காட்டுகிறது. 'காந்தி கண்ணாடி' திரைப்படம் ஒருபுறம் இருந்தாலும், மணிமேகலை மற்றும் பாலாவின் இந்த நட்பு, திரையுலகில் ஒரு நல்ல பாடத்தை நமக்கு உணர்த்துகிறது.












Click it and Unblock the Notifications