மாரி செல்வராஜின் பைசன் காளை மாடனுக்கு கிடைத்த மவுசு.. ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டுதே
சென்னை: இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் ஆன துரு விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் பைசன் காளை மாடன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பு அதிகமான வசூல் செய்திருக்கிறது. அந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
மாரி செல்வராஜ், இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராகப் பயிற்சி பெற்றவர். 2018ஆம் ஆண்டு "பரியேறும் பெருமாள்" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சாதிய ஒடுக்குமுறைகளை வெளிச்சம் போட்டு காட்டியதன் மூலம் பலருடைய கவனத்தைப் பெற்றார். தொடர்ந்து, நடிகர் தனுஷுடன் இணைந்து "கர்ணன்" திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை திரையில் சித்தரித்தார். இந்த திரைப்படமும் வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது.

மாரி செல்வராஜ் அடுத்த படம்
பின்னர், "மாமன்னன்" திரைப்படத்தின் மூலம் அரசியலில் நிலவும் சாதிய பாகுபாடுகளைப் பற்றி பேசியதன் மூலம் பாராட்டுக்களைக் குவித்தார். மூன்று வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, மாரி செல்வராஜ் தனது நான்காவது திரைப்படமான "வாழை" படத்தை இயக்கினார். இது அவரது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தின் கிளைமாக்ஸ் பலரையும் கண்கலங்க வைத்தது. அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வரும் மாரி செல்வராஜ், தற்போது "பைசன் காளமாடன்" திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார்.
துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படம்
"பைசன் காளமாடன்" திரைப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இப்படமும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடித்துள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இப்படம் திரைக்கு வர உள்ளது.
பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். மாரி செல்வராஜ் மற்றும் பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் இது. இதற்கு முன்பு, இவர்கள் இணைந்து "பரியேறும் பெருமாள்" திரைப்படத்தை தயாரித்தனர்.
பைசன் காளை மாடன் வசூல் நிலவரம்
சமீபத்திய தகவல்களின்படி, "பைசன் காளமாடன்" திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே பல கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தமிழக வெளியீட்டு உரிமையை ஃபைவ் ஸ்டார் நிறுவனம் 15 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 18 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது. வெளிநாட்டு உரிமம் 2 கோடி ரூபாய், தொலைக்காட்சி உரிமம் 5 கோடி ரூபாய் என மொத்தம் 40 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களின் உரிமமும் விரைவில் விற்பனை செய்யப்பட உள்ளது. திரையரங்குகள் மூலம் கிடைக்கும் வசூலையும் கணக்கிட்டால், "பைசன்" திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications