சாப்டீங்களான்னு கேட்ட மருமகள்..கண்ணீர் விட்டு அழுத மாமனார்கள்..நீயா நானாவில் நெகிழ்ச்சி தருணங்கள்
சென்னை: பசியோடு இருக்கும் ஒருவரைப் பார்த்து சாப்டீங்களா? சாப்பிடுங்க என்று சொல்வது மிகப்பெரிய விஷயம். இன்றைய கால கட்டத்தில் பல வீடுகளில் சின்னச் சின்ன விசாரிப்புக்கள் கூட இல்லாமல் போய் விடுகிறது. மனைவி, மகன்களிடம் கிடைக்காத விசாரணையும் கரிசனமும் வீட்டிற்கு வந்த மருமகள்கள் மூலம் கிடைப்பது மாமனார்களை கண்கலங்க வைத்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் மாமனார்களும் காதல் திருமணம் செய்து கொண்ட மருமகள்களும் பங்கேற்று பேசினர். மருமகள்கள் வந்த பிறகு உங்களுடைய வீட்டில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்பட்டது என்று கோபிநாத் கேட்க, மாமனார்கள் கண் கலங்கி போனார்கள்.
நான் பல ஆண்டுகாலமாகவே தனியாகத்தான் சாப்பிடுவேன். என்னை சாப்பிட்டியா என்று கேட்க கூட ஆள் கிடையாது. மகனுக்கு திருமணமாகி என் மருமகள் வந்த உடன் மனைவி, மகன்கள் என அனைவரும் ஒன்றாக சாப்பிடுகிறோம். என் மகன்களை பார்த்து பேச எனக்கு நேரம் கிடைத்துள்ளது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் ஒரு மாமனார்.

காதல் திருமணத்திற்கு ரொம்ப எதிர்ப்பு தெரிவித்த மாமனாரை சில நாட்களிலேயே மனதை மாற்றியுள்ளார் மருமகள். சாப்பிட்டியா என்று என்னை யாருமே கேட்டதில்லை. என் மருமகள் வந்து சாப்பியா என்று கேட்டு இட்லி எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தார். ரூமில் போய் தனியா அழுதேன் என்று கூறினார் ஒரு மாமனார்.
மனைவி இறந்த பிறகு தனக்கு பணிவிடை செய்கிறார் மருமகள் என்று கூறி கண் கலங்கினார் ஒரு மாமனார். படுக்கை விரிப்பு தொடங்கி பல வேலைகளை செய்கிறார் என்று சொன்னார் ஒரு மாமனார். மனைவி சுடும் தோசையை விட காதல் திருமணம் செய்து வந்த மருமகள் அழகாய் தோசை சுட்டு ருசியாக தருவார். மூத்த மருமகள், மனைவி, புதிய மருமகள் என மூவருமே ஒற்றுமையாக இருப்பது ஒரு பலம் என்று சொன்னார் ஒரு மாமனார்.
குடும்பத்தோடு ஒற்றுமையாக வெளியே கிளம்பி போகிறோம் என்று சொன்னார் ஒரு மாமனார். பொருளாதார ரீதியாக சுதந்திரம் கொடுத்த மருமகள் மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தை கொடுத்துள்ளார் என்று சொன்னார் ஒரு மாமனார்.
இந்த மாமனார்கள் எல்லாம் ஆரம்பத்தில் காதல் திருமணத்திற்கு எதிர்த்தவர்கள்தான். காதலே பிடிக்காத மாமனார்கள்தான் மருமகள்களை தாங்கு தாங்கு என்று தாங்குகின்றனர். தனக்கு நோய் வந்த போது தன்னை கவனித்த மருமகளை ஏற்றுக்கொண்டு இப்போது மகளாக பாவித்து பணிவிடை செய்து வருகின்றனர்.
இதையெல்லாம் விட ஒரு படி மேலே போய் வேலையே இல்லாத தனது மகனை காதலித்து திருமணம் செய்து கணவருக்கும் வேலை வாங்கிக்கொடுத்து குடும்பத்தை முன்னேற்றியிருக்கிற மருமகளைப் பற்றி பெருமையாக சொன்னார் ஒரு மாமனார். அதற்கு என்ன காரணம் என்று கோபிநாத் கேட்ட போது அவருக்கு எந்த கெட்டப்பழக்கமும் இல்லை என்று சொன்னார் அந்த பெண். அம்மா அப்பாவை நன்றாக பார்த்துக்கொள்ளும் பையன், மனைவியை நன்றாக பார்த்துக்கொள்வார் என்றும் மகிழ்ச்சியோடு சொன்னார். அந்த பெண்ணைப் பார்த்து உனக்கு ஒரு மீம் போடுவார்கள் தூக்குடா அந்த தங்கத்தை என்றும் சொல்வார்கள் என்று கோபிநாத் சொல்ல மருமகளும் மாமனாரும் வெட்கப்பட்டு சிரித்தனர்.
மாமியார்கள் மருமகள்கள் இடையே சண்டை சச்சரவு இல்லாமல் எப்படி இருப்பது என்று பேசியது போக மாமனார்களுக்கும் மருமகள்களுக்கும் இடையேயான பந்தத்தை அழகாய் உணர்த்தியது நீயா நானா நிகழ்ச்சி.












Click it and Unblock the Notifications