40 நாட்களுக்கு பிறகு வீட்டுக்கு வெளியே வந்த மீனா.. கவலை தோய்ந்த புன்சிரிப்பு.. ரசிகர்கள் ஆறுதல்
சென்னை: கணவர் இறப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீனாவை அவரது தோழிகள் மீட்டு கொண்டு வருகிறார்கள்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 1990களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவருக்கு 2009ஆம் ஆண்டு சாப்ட்வேர் என்ஜினியருடன் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு நைனிகா என்ற 10 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் மீனாவின் கணவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இளம் வயதுதான்.. நடிகை மீனா கணவர் மரணம்.. பின்னணி என்ன.. கலா மாஸ்டர் சொன்ன உருக்கமான தகவல்!
இரு நுரையீரல்
இந்த நிலையில் அவரது இரு நுரையீரல்களும் சேதமடைந்ததால் அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் நுரையீரலை தானமாக பெற வித்யாசாகர் காத்திருந்தார். பலமுறை அவருக்கு நுரையீரல் கிடைத்தும் அவருடைய உடலுக்கு அது பொருந்தவில்லை.
உடல் உறுப்புகள்
வித்யாசாகரின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து கொண்டே வந்த நிலையில் கடந்த மாதம் அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து அந்த நாள் முதல் அவரது உடலை நல்லடக்கம் செய்யும் வரை அவருக்கு உதவியாக இருந்தது கலா மாஸ்டர்தான். வித்யாசாகருக்கு மீனாதான் இறுதிச் சடங்குகளை செய்தார்.
நைனிகா
மீனாவும் நைனிகாவும் சாகரின் இறப்பால் கடுமையான சோகத்தில் ஆழ்ந்தனர். தந்தை இறந்த பிறகு குழந்தை நைனிகா உணவு கூட சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்ததாக கலா மாஸ்டர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் மீனா தனது தந்தையை இழந்தார். தற்போது தனது மகளும் கணவரை இழந்துவிட்டதால் மீனாவின் தாய் மல்லிகாவின் மனம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மீனாவின் தோழிகள்
இவர்களுக்கு தற்போது ஆறுதலாக இருப்பது மீனாவின் தோழிகள்தான். மீனாவின் தோழிகளான கலா மாஸ்டர், சங்கவி, ரம்பா உள்ளிட்டோர்தான். இவர்கள் அவ்வப்போது மீனாவை சந்தித்து அவர் துயரில் இருந்து மீள்வதற்கான விஷயங்களை செய்து வருகிறார்கள். இது தொடர்பான ஒரு புகைப்படத்தை கலா மாஸ்டர் தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
கடற்கரையில் மீனா
அதில் ஏதோ ஒரு கடற்கரையில் மீனா, அவரது தாய் மல்லிகா, மகள் நைனிகா, ரம்பா, கலா மாஸ்டர் ஆகியோர் உள்ளார்கள். மீனாவின் முகத்தில் லேசான புன்னகை. மீனா தனது சோகத்திலிருந்து வெளியே வந்தால்தான் தனது குழந்தைக்கும் தாய்க்கும் அவரால் ஆறுதலாக இருக்க முடியும். தனது பணிகளையும் அவரால் கவனம் செலுத்த முடியும்.
புகைப்படம் வைரல்
இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. மீனா ரசிகர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு அவரது முகத்தில் சிரிப்பை பார்க்கிறார்கள். இதனால் கலா மாஸ்டருக்கும் மீனாவின் தோழிகளுக்கும் நன்றி தெரிவித்து வருகிறார்கள். மீனா இயல்பு நிலைக்கு திரும்புவது மகிழ்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.