ஆண் மீது மட்டும் தவறு இல்லை.. ரவி மோகனுக்காக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா.. விவாகரத்து சர்ச்சையில் திருப்பம்
சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக அதிகம் பேசப்பட்டு வரும் விஷயம் நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து சர்ச்சை தான். நீண்ட காலமாக அமைதியாக இருந்து வந்த ரவி மோகன், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து தனது குடும்ப வாழ்க்கை குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பேட்டிக்குப் பிறகு சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், தற்போது நடிகை மீரா சோப்ராவும் வெளிப்படையாக ரவி மோகனுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.

நடிகை மீரா சோப்ரா
தமிழில் எஸ்.ஜே.சூர்யாவுடன் 'அன்பே ஆருயிரே' படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான மீரா சோப்ரா, ரவி மோகனின் பேட்டியை பார்த்த பிறகு சமூக வலைதளத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், ரவி மோகனை தனிப்பட்ட முறையில் தெரியும் என்றும், தென்னிந்திய சினிமாவில் பணியாற்றிய காலத்திலேயே அவர் மிகவும் எளிமையான, இனிமையான மனிதர் என்ற எண்ணம் தன்னிடம் உருவானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, "எப்போதும் ஆண்கள் மட்டுமே தவறு செய்பவர்கள் அல்ல. சில நேரங்களில் பெண்களும் சட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை பார்க்கிறோம். ஒரு பிரச்சனையில் இரு தரப்பினரின் குரலையும் கேட்க வேண்டும். ரவி மோகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்" என்ற கருத்தையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.
மீரா சோப்ராவின் பதிவு
மீரா சோப்ராவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதுவரை ரசிகர்கள் மட்டுமே ரவி மோகனுக்கு ஆதரவாக பேசி வந்த நிலையில், தற்போது திரையுலகை சேர்ந்த நடிகையும் திறந்தவெளியில் ஆதரவு தெரிவித்திருப்பது இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
இந்த ஆதரவுக்கான முக்கிய காரணம் ரவி மோகன் சமீபத்தில் வெளியிட்ட எமோஷனலாக சொன்ன குற்றச்சாட்டுகள்தான். செய்தியாளர்களை சந்தித்தபோது, திருமண வாழ்க்கையில் தான் பல மன உளைச்சல்களை சந்தித்ததாக அவர் கூறியிருந்தார். குடும்ப விஷயங்களை வெளியே சொல்ல விரும்பாமல் இதுவரை அமைதியாக இருந்ததாகவும், ஆனால் தற்போது உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
ரவி மோகன் எமோஷனல்
அதில் மிகவும் அதிர்ச்சி அளித்த குற்றச்சாட்டு, தனக்கு சொந்தமான பண விஷயங்களில்கூட முழு சுதந்திரம் இல்லை என்பதுதான். தான் சம்பாதித்த பணம் இருந்தாலும், தனக்கென்று சுதந்திரமான வங்கி கணக்கு கூட இல்லாத நிலை இருந்ததாகவும், தனது கார்டு பயன்படுத்தினாலே அதற்கான தகவல் உடனடியாக மனைவிக்கு சென்று விடும் என்றும், பின்னர் ஏன் செலவு செய்தாய், எதற்காக செய்தாய் என்று தொடர்ந்து கேள்விகள் வரும் என்றும் அவர் கூறியது சோசியல் மீடியாவில் அதிகமாக விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதோடு, தனது குழந்தைகளை பார்க்க விடாமல் தடுக்கப்படுவதாகவும் அவர் கண்கலங்கியபடி கூறி இருந்தார். ஒரு தந்தையாக இது தான் தன்னை அதிகமாக உடைத்துவிட்டதாகவும் கூறியிருந்தார். இதனால்தான் பலரும் அவருக்கு அனுதாபத்துடன் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ரவி மோகன் குற்றசாட்டு
ரவி மோகனின் வாழ்க்கையில் முக்கியமாக பேசப்பட்ட மற்றொரு விஷயம், தனது கஷ்டமான காலத்தில் அருகில் இருந்த தோழியை கூட தன்னிடமிருந்து பிரித்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு. இதையும் அவர் மிகவும் வேதனையுடன் குறிப்பிட்டிருந்ததாக கூறப்பட்டது.
இந்த பேட்டிக்குப் பிறகு சமூக வலைதளங்களில் கருத்துக்கள் இரண்டாகப் பிளந்தன. சிலர் ரவி மோகனுக்கு முழு ஆதரவு தெரிவித்தனர். "ஒரு ஆண் மன வேதனை பற்றி பேசினாலே ஏன் சந்தேகமாக பார்க்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினர். மறுபுறம், குடும்ப விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் பொது வெளியில் இப்படி பேசுவது சரியா என்ற கேள்வியும் எழுந்தது.
நடிகர் விக்ரம் சொன்ன விஷயம்
இதற்கிடையில் நடிகர் விக்ரம் பழைய விருது விழாவில் பேசிய ஒரு வீடியோவும் மீண்டும் வைரலானது. அதில், ரவி மோகனிடம் பணம் இருக்காது; ஏதாவது தேவைப்பட்டால் மனைவி வழியாகத்தான் வாங்கித் தருவார் என்று காமெடியாக பேசியிருந்தார். அந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் மீண்டும் பகிர்ந்து, "அப்போவே சில விஷயங்கள் இருந்திருக்குமோ?" என்று பேசி வருகின்றனர்.
இப்போது மீரா சோப்ரா அளித்த ஆதரவு இந்த விவகாரத்தை இன்னும் அதிகம் பேசப்படும் விஷயமாக மாற்றியுள்ளது. குறிப்பாக, "ஆண் தரப்பின் குரலும் கேட்கப்பட வேண்டும்" என்ற அவரது கருத்து இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மொத்தத்தில், ரவி மோகன் விவாகரத்து சர்ச்சை நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை எடுத்து வரும் நிலையில், மீரா சோப்ராவின் ஆதரவு பதிவு இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.













Click it and Unblock the Notifications