நீயா நானா 'மும்மொழிக் கொள்கை' எபிசோடு நிறுத்தம்? வேறு டாபிக் இன்று ஒளிபரப்பு.. வெடித்தது சர்ச்சை!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான 'டாக் ஷோ'வாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக விவாதம் நடந்த நிலையில், அந்த எபிசோடு இன்று ஒளிபரப்பு செய்யப்படாமல் அதற்கு பதிலாக சமையல் தொடர்பான விவாதம் ஒளிபரப்பாக உள்ளது.
மும்மொழிக் கொள்கை விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியை கொடுப்போம் என தெரிவித்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

மும்மொழிக் கொள்கை விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. நாள்தோறும், மத்திய பாஜக அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள், மும்மொழிக் கொள்கைக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பாஜகவினரோ, திமுகவின் நிலைப்பாட்டை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "நீயா? நானா?" விவாத நிகழ்ச்சியில் இந்த வாரம் 'மும்மொழிக் கொள்கை' விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. மும்மொழிக் கொள்கை ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சி, சூட்டோடு சூடாக இன்று ஒளிபரபரப்பு செய்யப்பட இருந்தது.
விஜய் தொலைக்காட்சி சமூக வலைதள பக்கங்களிலும் மும்மொழிக் கொள்கை ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் என்ற தலைப்பிட்டு விளம்பரமும் கொடுக்கப்பட்டது. ஆனால் நேற்று இரவு திடீரென அந்த பதிவு நீக்கப்பட்டது. மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதம் இன்று ஒளிபரப்பு செய்யப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
மும்மொழிக் கொள்கை தலைப்பிலான விவாதத்தை தவிர்த்துவிட்டு, வேறு ஒரு டாப்பிக்கை எடிட் செய்து இன்று (மார்ச் 16) ஒளிபரப்ப உள்ளனர். மும்மொழிக் கொள்கை தொடர்பான நீயா நானா நிகழ்ச்சியை பார்க்க பலரும் ஆர்வமாக இருந்த நிலையில் திடீரென இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.
மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்துக்கு பதிலாக இன்று சமையல் தொடர்பான 'நீயா நானா' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதுதொடர்பான புரொமோஷன் பதிவுகளை விஜய் டிவி தமது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
யாருடைய அழுத்தத்தின் காரணமாக விஜய் தொலைக்காட்சி, 'மும்மொழிக் கொள்கை' தொடர்பான எபிசோடை ஒளிபரப்புவதில் இருந்து பின்வாங்கி உள்ளது என்ற கேள்வியை பலரும் முன்வைத்துள்ளனர். இதன் பின்னணியில் அரசியல் அழுத்தங்கள் இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக பொதுவெளியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பத்திரிகையாளர் ராஜீவ் காந்தி, "நீயா நானா நிகழ்ச்சி - மனிதர்களின் உணர்வுகளை அப்படியே வெளியில் காட்டிய நிகழ்ச்சி. சமூக நீதி பக்கம் நின்று அறம் பேசிய நிகழ்ச்சி. இனி அந்த அறம் தொடருமா என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்நாட்டில் சில வாரங்களாகவே பற்றி எரிகின்ற மும்மொழிக் கொள்கை - இந்தி திணிப்பு விவகாரத்தை கடந்த வாரம் டாபிக்காக எடுத்து பேசி இருக்கின்றனர். என்ன பேசப்பட்டு இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். இதில் கலந்து கொண்ட பாஜகவினர் மேலிடத்தில் கூறி இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானால் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக நாம் கூறி வரும் அனைத்தும் பொய் என தெரியவரும். ஆகவே உடனே நிறுத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது.
அதன்படி நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு வேறு டாபிக்கை அவசர அவசரமாக ஒளிபரப்பி உள்ளனர். நாளையும் ஒளிபரப்பப் படவில்லை. படப்பிடிப்பு நடத்தி எடிட் செய்து ஃபைனல் செய்த நிகழ்ச்சியையே தூக்கி போட்டு விட்டனராம். ஒளிபரப்பாகாது என்கின்றனர். ரிலையன்ஸ் குழுமமான ஜியோ ஸ்டார் குழுமத்தை வாங்கியபோதே நாம் விரும்பி பார்க்கும் ஒரே நிகழ்ச்சியான நீயா நானா என்ன ஆகுமோ என அச்சப்பட்டேன். அது நிகழ்ந்தே விட்டது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications