pommukutty ammavukku serial: திருவிழா கூட்டத்தில் காணாமல் போன குழந்தையோட கதை!
விஜய் டிவியில் இன்று முதல் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகத் துவங்கியுள்ள சீரியல், பொம்முக்குட்டி அம்மாவுக்கு. இது திருவிழா கூட்டத்தில் தொலைந்து போன இரண்டரை வயது பெண் குழந்தை, அதைத் தேடி வாடும் அம்மா பற்றிய கதை. தாய் வேறு இடத்தில்...குழந்தை தனியாக வளர்கிறது.
குழந்தையை தொலைக்கும்போது கைக்குழந்தை. இப்போது குழந்தை தொலைந்து நாலு வருஷம் ஆச்சுன்னு சொல்றார் குழந்தையின் அப்பா. குழந்தையும், அம்மாவும் ஒன்று சேர்வார்களா என்று தினமும் எதிர்பாப்போடு சீரியலை கொண்டு செல்ல இருக்கிறார்கள், போலும்.
இந்த சீரியலில் எல்லாரும் பார்த்த முகமாகவே இருக்கிறார்கள். குழந்தையின் அம்மா தவிர. விஜய் டிவிக்கு என்று நடிக்க ஒரு தனி நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள். அவர்கள்தான் இந்த சீரியலிலும் நடித்து வருகிறார்கள்.
விஜய் டிவி மதிய சீரியல்
விஜய் டிவியில் மத்தியான நேரத்தையும் சீரியல்களை ஒளிபரப்பி சன்,ராஜ், பாலிமர் தொலைக்காட்சிகளோடு போட்டிக்கு வந்து இருக்கிறார்கள். எப்போதும் விஜய் டிவியில் மறு ஒளிபரப்பு சீரியல்களையே பார்க்க முடியும். ஆனால், இப்போது மதியம் 2 மணிக்கே சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பாக உள்ளன. இதில் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், தேன்மொழி பிஏ போன்ற சீரியல்கள் புதிதாக பகல் நேரத்தில் ஒளிபரப்பாக ஆரம்பித்து இருக்கிறது.
சன் டிவியில் சீரியல்கள்
சன் டிவியில் சீரியல்கள் ஆக்கிரமிப்பு என்பது காலை 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் 3:00 மணிவரை இருக்கிறது. இதற்கு பின் சன் டிவியில் திரைப்படங்கள் ஒளிபரப்பாகும். அந்த நேரத்தில்தான் விஜய் டிவி மறுமுறை ஒளிபரப்பு என்று சில சீரியல்களை மாலை 5:30 மணி வரை ஒளிபரப்பி வந்தது.இப்போது இதில் புதிதாகவும் சீரியல்கள் மதிய நேரத்துக்கு என்று ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளன.
போட்டி வேண்டும்
போட்டி வேண்டும்தான் என்றாலும், சீரியல்கள் ஒளிபரப்புவதிலா அந்த போட்டி இருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. என்றாலும் மக்களுக்கு பிடித்த இடத்தில் அதுவும் முதலிடத்தில் தொலைக்கட்சி சீரியல்கள்தான் உள்ளன. இதில் போட்டி இருப்பதும் நல்லதுக்குத்தான் போல. பாலிமர், ராஜ் தொலைக்காட்சிகள் கூட மத்தியான நேரத்தில் டப்பிங், மற்றும் சொந்த தயாரிப்பு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.
பொம்முக்குட்டி அம்மாவுக்கு
இன்று முதல் ஒளிபரப்பாகத் துவங்கி இருக்கும் பொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியலும் சத்யராஜ், சுஹாசினி நடித்த திரைப்படத்தின் பெயரைக் கொண்டு அமைந்துள்ளது. விஜய் டிவியின் பல சீரியல்கள், சினிமாவின் பெயரைக் கொண்ட சீரியல்களாகவே அமைத்து இருப்பதையும் பார்க்கலாம். இந்த டிரெண்டை விஜய் டிவி ராஜா ராணி சீரியல் மூலம் ஆரம்பித்து வைக்க கப்பென்று பிடித்துக்கொண்டு மற்ற சேனல்களும் சினிமா பெயரை சீரியல்களுக்கு சூட்டி, மக்களிடம் சுலபத்தில் ரீச்சாகி வருகின்றன.