சூர்யாவின் ரெட்ரோ அதே "வாடை" அடிக்குதே.. வெற்றி? அதுவிடுங்க, இளையராஜா இளையராஜாதான்: Retro Review
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படம் நேற்றைய தினம் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்னரே கனிமா பாடல் பட்டிதொட்டியெங்கும் வைரலானது.. முக்கியமாக சூர்யாவின் கெட்டப் இந்த படத்தில் வித்தியாசமாக இருப்பதாக கூறப்பட்டதுடன், மிகுந்த எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி வந்தது.. இப்போது இந்த படத்தை பற்றின விமர்சனங்கள் வெளிவர துவங்கியிருக்கின்றன. அந்தவகையில், பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, இந்த படம் சூர்யாவுக்கு வெற்றிப்படம் என்று சொல்லியிருக்கிறார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "சூர்யாவுக்கு ரெட்ரோ நிச்சயம் கம்பேக் கம்பேக்தான்.. ஹேட்டர்ஸ் எல்லாம் கோ பேக், கோ பேக் என்றுதான் சொல்ல வேண்டும்.. "ஜிதர்தண்டா டபுள் எக்ஸ்" படத்தின் சாயல் இந்த படத்தில் இருப்பதை தவிர்க்க முடியவில்லை.. இப்படியொரு சாயல் இருந்ததால், கதையில் சலிப்பும் சேர்ந்துகொள்கிறது.

சபாஷ் ஜெய்ராம்
ஆனாலும், நிறைய மர்மமுடிச்சுகள் படத்தில் உள்ளன.. அந்த சிக்கல்கள் ஒவ்வொன்றையும் சூர்யா அவிழ்த்து வருவதால், படத்தின் கதை வேறு மாதிரியான வடிவத்தை தந்துவிட்டது, சிரிப்பே வராத அளவுக்கு இப்போதுள்ள காமெடியன்கள் எல்லாம் சினிமாவில் காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில், ஜெயராம் கேரக்டர் மிகவும் நல்லாவே இருக்கு.. சிரிப்பு டாக்டர் என்ற கேரக்டரை மிகவும் பிரம்மாதமாக செய்துள்ளார் ஜெய்ராம்.
யாரை வேண்டுமானாலும் சிரிப்பு காட்டிவிடுவார் ஜெயராம். ஆனால், அந்த ஊர் மக்களில் ஒருத்தருக்கு கூட சிரிப்பு காட்ட முடியவில்லை. என்னென்னமோ ஜெயராம் ஜோக் சொல்லியும்கூட,யாரும் சிரிக்கவில்லை.
"நான் இவ்வளவு ஜோக் சொல்லியும் ஏன் சிரிக்க மாட்டேங்கறீங்க?" என்று ஜெய்ராம் ஊர்மக்களிடம் கேட்க, வெறும் பயத்தையும், அடிமைத்தனத்தையும் மட்டுமே பார்த்து வளர்ந்ததால் சிரிப்புன்ன்னாலே என்னன்னு தெரியாது என்பது பதிலாக கிடைக்கிறது. இப்படிப்பட்ட மக்களை, சூர்யா எப்படி போராடி சிரிக்க வைக்கிறார், எல்லார் முகத்திலும் எப்படி சிரிப்பை கொண்டு வருகிறார் என்பதுதான் கதையின் அடிப்படை.
சிங்கிள் டேக் ஷாட்
கேமரா ஓர்க் சிங்கிள் டேக் அதிக அளவு எடுக்கப்பட்டுள்ளது.. சந்தோஷ் நாராயணன் பற்றி இங்கே சொல்லியாகணும்.. எல்லா பாடல்களுமே இதில் நன்றாக உள்ளது..
கண்ணாடி பூக்கள், ஆத்தி சந்தன கட்டை உட்பட எல்லாமே நல்லாயிருக்கு. இந்த குரூப் டான்ஸில், சூர்யா, பூஜா ஹெக்டவுடன் சேர்ந்து சந்தோஷ் நாராயணனும் சேர்ந்து டான்ஸ் ஆடுவது வித்தியாசமாக இருக்கிறது.. அப்போது டான்ஸ் ஆடும்போதே, சண்டைக்காட்சி வருகிறது, டயலாக் வருகிறது, மறுபடியும் பாட்டு வருகிறது, என்று மொத்தம் 15 நிமிஷத்தில் சிங்கிள் டேக்கில் எடுத்திருக்கிறார்.
இப்படி ஒரே டேக்கில் எடுப்பது மிகவும் சிரமமான விஷயமாகும்.. 400 பேர் டான்ஸ் ஆடுகிறார்கள் என்றால், அனைவருமே ஒரே மாதிரியாக நடனமாட வேண்டும். மொத்தத்தில், அந்த போர்ஷனே ரொம்ப சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கிறது. அதை கார்த்திக் சுப்புராஜ் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
இளையராஜா இளையராஜாதான்
படத்தில் நீள நீளமான காட்சிகள் இருந்தாலும் பார்க்குறதுக்கு லட்டு லட்டாக இருக்கிறது.. கேமரா சிறப்பாக இருக்கிறது.. பாடல்கள் பட்டைய கிளப்புது.. ரிலீஸுக்கு முன்பே கண்ணாடி பூக்கள், ஆத்தி சந்தன கட்டை ஹிட்டாகிவிட்டது., அதைவிட, பழைய பாட்டான, "செனோ ரீட்டோ" சூப்பராக இருக்கிறது. அந்த பாட்டை பார்க்கும்போதே, "ஐயயோ இளையராஜா, நோட்டீஸ் தந்துடுவாரோ? 5 கோடி கேட்டுட போறாரோ?" என்றெல்லாம் பயம் வந்தாலும், நினைத்து பார்க்க முடியாத சந்தோஷத்தை அந்த பாடல் தருகிறது.
என்ன இருந்தாலும் இளையராஜா இளையராஜாதான் என்றும் சொல்ல தோன்றியது. பொதுவாக, பாடல்களுக்கு தயாரிப்பாளர்களையும் தாண்டி இளையராஜா ராயல்டி கேட்பது தவறான விஷயம்.. ஆனால், அவரது இதுபோன்ற பாடல்களை எல்லாம் கேட்கும்போது, ராயல்டி அவருக்கு கொடுத்தாலும் தப்பில்லை என்றே நினைக்க தோன்றுகிறது.
ரஜினியின் கெட்டப்
இதில் சூர்யாவின் காதலியாக பூஜா ஹெக்டே ருக்மணி என்ற பெயரில் நடித்துள்ளார்.. அடிதடி, பஞ்சாயத்து, வெட்டு குத்து கொலைகள், எதுவும் வேண்டாம் என்கிறார் காதலி. அதற்கு சரி என்று ஒப்புக் கொள்ளும் சூர்யாவால், அவைகளை விட முடியவில்லை. அதனால், காதலி கோபித்து கொண்டு சென்றுவிடுகிறார்.. உடனே அவரை தேடிப்பிடித்து சமாதானம் செய்து, அடிதடியை விட்டுவிட்டதாக சொல்கிறார். ஆனால், மீண்டும் அடிதடியில் சூர்யா இறங்கும் சூழல் வந்துவிடுகிறது.
சூர்யவை பொறுத்தவரை, பெரிய அளவிலான டான்ஸ், ஆக்ஷன், சண்டை எல்லாமே சிறப்பாக செய்திருக்கிறார்.. சூர்யா ரசிகர்களுக்கான படமாக இது உள்ளது.. சண்டை காட்சிகளில் கடுமையாக உழைத்திருக்கிறார் சூர்யா. அவரது நடிப்பு இந்த படத்தில் பிரம்மாதமாக உள்ளது. பண்பட்ட நடிகருக்கான நடிப்பை பார்க்க முடிகிறது.. தன்னுடைய நடிப்பின் முத்திரையை பதித்துள்ளார்.. ஜானியில் முடிவெட்டும் ரஜினியின் கெட்டப்பும், ரெட்ரோ சூர்யாவின் கெட்டப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கு..
சூர்யாவுக்கான படம்
இது தமிழ் சினிமாவின் சாதாரண கதை என்றாலும், அந்த கதைக்குள் ஒரு மேஜிச் செய்துள்ளார்கள்.. சூர்யாவுக்கான விஷயங்கள் இந்த படத்திலும், இது கார்த்திக் சுப்புராஜின் படம் என்பது பளிச்சென தெரிகிறது. கலர்புல் படமாக உள்ளது.. குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.. நல்ல தரமான படத்தை தந்துள்ளார்.. மொத்தத்தில், நல்ல நல்ல வரறேப்பை பெற்றுள்ளது. கலெக்ஷன் பெரிய அளவுக்கு இருக்க போகிறது" என்று தெரிவித்துள்ளார்.
மற்றொருபுறம், ரெட்ரோ படத்தில் பாராட்டத்தக்க சில அம்சங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக படம் சூர்யா ரசிகர்களையும் கூட திருப்திபடுத்தவில்லை என்ற விமர்சனங்களும் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளன.. அதாவது, முதல் பாதி குறை எதுவும் இல்லாத வகையில் சுவாரஸ்யமாக நகர்ந்துள்ள நிலையில், 2ம் பாதி ஒட்டுமொத்த படத்தையும் கீழே கொண்டு போய் விட்டதாக கூறுகிறார்கள்.
கலவையான விமர்சனம்
சூர்யா கடுமையாக உழைத்திருந்தாலும், அவரது ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளதாக தெரிகிறது. ஜெய் பீம் படம் வெளியானதிலிருந்தே வேண்டுமென்றே சோஷியல் மீடியாவில் பலரும் வன்மத்தை கக்கி வருகிறார்கள். இதற்கு நடுவில், அடுத்தடுத்து வெளியாகும் படங்களை பற்றின நெகட்டிவ் கமெண்ட்கள், சூர்யா குடும்பத்தினரின் பேச்சுக்களை சர்ச்சையாக்குவது என சோஷியல் மீடியாவில் பரவி கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு ரெட்ரோ படம் சக்ஸஸ் ஆகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கலவையான விமர்சனத்தை ரெட்ரோ பெற்று வருவதாகவும், எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் பூர்த்தி செய்யவில்லை என்பதே பலருடைய கருத்தாகவும் உள்ளது.. இதற்கு நடுவில், முதல் நாள் உலகளவில் ரெட்ரோ படம் செய்துள்ள வசூல் ரூ. 30 கோடிக்கும் மேல் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன...!












Click it and Unblock the Notifications