Robo Shankar: நாங்க சொன்னதை ரோபோ சங்கர் கேட்கல! நாளை மறுநாள் பேரனுக்கு காதுகுத்து! கலங்கிய சினேகன்
சென்னை: (Robo Shankar death reason) இயல்பான கலை வெளிப்பாட்டால் ரசிகர்களை மகிழ்வித்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், உடல்நலக் குறைவால் தனது 46வது வயதில் காலமானார். அவரது மறைவு, ஒட்டுமொத்த திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரிப்பால் மக்களை மகிழ்வித்த ஒரு கலைஞன், தனது வாழ்க்கையின் இறுதி நாட்களில் வலிகளால் அவதியுற்றது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. அவருடைய பேரனுக்கு நாளை மறுநாள் காது குத்து பங்க்ஷன் நடத்துவதாக சொன்னதாக சினேகன் கூறியிருக்கிறார்.

மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்டு வந்தவர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரோபோ சங்கர், தனது தனித்துவமான உடல்மொழி மற்றும் நகைச்சுவையால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அவரது திறமையைக் கண்டறிந்த நடிகர் தனுஷ், தான் ஹீரோவாக நடித்த மாரி படத்தில் அவருக்கு ஒரு முக்கியக் கதாபாத்திரத்தை வழங்கினார். சனிக்கிழமை என்ற கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, பிஸியான நடிகராக மாறினார்.
திரைப்படங்களில் பிக்கியான வாழ்க்கையை வாழ்ந்த ரோபோ சங்கருக்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதீத மதுப்பழக்கத்தால் அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. மரணத்தின் விளிம்பில் இருந்து அவர் போராடி மீண்டு வந்தார். "மறு பிறப்பு எடுத்தார்" என்றே சொல்லுமளவுக்கு, சிகிச்சை பெற்று முழுமையாகக் குணமடைந்தார். அதன் பிறகு மதுப்பழக்கத்தை முழுவதுமாக நிறுத்தி, தனது கலைப்பயணத்தில் முழு கவனம் செலுத்தினார்.
மீண்டும் வந்த சோகம்
வாழ்க்கை இனி பிரச்சனை இல்லை என்று நினைத்திருந்த சூழலில், நேற்று மீண்டும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் பதறிய குடும்பத்தினர் அவரை உடனடியாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். ஒருமுறை மரணத்தைத் தப்பித்து வந்தவர், இரண்டாவது முறை அதனை வெல்ல முடியாமல் போனது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாடலாசிரியர் சினேகன் உருக்கம்
ரோபோ சங்கரின் மறைவுக்குப் பல பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் தனுஷ் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் நேற்றிரவே அஞ்சலி செலுத்தினர்.
ரோபோ சங்கரின் உடல், சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு அஞ்சலி செலுத்த வந்த பாடலாசிரியரும், நடிகருமான சினேகன், செய்தியாளர்களிடம் உருக்கமாகப் பேசினார். "ரோபோ சங்கர் ஏறிய முதல் மேடையிலிருந்தே நான் அவருடன் இருந்திருக்கிறேன். எந்த மேடையாக இருந்தாலும், அதைத் தனக்குரியதாக மாற்றிக்கொள்வார். எனது உடல்நிலையை சரியாக கவனிக்கவில்லை என என்னைப்போல் பல நண்பர்கள் அவரிடம் கவலைப்பட்டிருக்கிறோம். இருந்தபோதும், மனம் சொன்னதை மட்டுமே கேட்டுச் செயல்பட்டார். அதனால்தான் நம்மை விட்டுச் சென்றுவிட்டார்" என்று கண்ணீருடன் குறிப்பிட்டார்.
நாளைய மறுநாள் தனது பேரனுக்குக் காதுகுத்து ஏற்பாடு செய்திருந்த ரோபோ சங்கர், அதற்குள் நம்மை விட்டுப் பிரிந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கண்கலங்க பேசி இருந்தார். சிரிப்பால் பலரைக் கவர்ந்த ஒரு கலைஞன், தனது மரணத்தால் பலரது கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டுச் சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications