Run serial: ரன்.. திரைப்பட பாணியில் இருக்கிறதே.. செட்டாகுமா?
சென்னை: சன் டிவியின் ரன் சீரியல் முற்றிலும் திரைப்பட பாணியில் இருக்கிறது. இன்னமும் கதை சரியாகப் பிடிபடவில்லை. சீரியல் பாணியை விட்டு விலகி இருக்கும் இந்த பாணி கை கொடுக்குமா?
விகடன் டெலிவிஸ்டாஸ் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அதே போல ரசிகர்களை ஏமாற்றியது இல்லை விகடன் டெலிவிஸ்டாஸும். இதுவரை சக்ஸஸ் சீரியல்கள் மட்டுமே கொடுத்து வருகிறது.
சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரன் சீரியலின் கதை இன்னும் சரியாக பிடிபடவில்லை. அது மட்டும் இல்லாமல் சீரியல் திரைப்பட பாணியில் பயணிக்கிறது. கதையின் நாட் பிடிபடவில்லை.
பின்னோக்கிய ஓட்டம்
ஆரம்பத்தில் நடப்பு கதையில் ஓடத் துவங்கிய சீரியல், இப்போது ஃபிளாஷ் பேக் என்று பின்னோக்கிய ஓட்டத்தில் போய்க்கொண்டு இருக்கிறது. அவ்வப்போது முன்னுக்கும் ஓடுவதால் நிஜமா கதை குழப்பமா இருக்கிறது.அடித்தட்டு மக்களையும் கவர்ந்து இழுத்து கட்டிப்போடும் விகடன் டெலிவிஸ்டாஸுக்கு இந்த சீரியல் அப்படி கைக் கொடுக்குமா என்பது தெரியவில்லை.
படப்பிடிப்பு பிரமாண்டம்
சீரியலில் ஹாங்காங் படப்பிடிப்பும், அடுத்து உள்ளூர் படப்பிடிப்பும் சினிமா பாணியில் இருந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது.சீரியல் விரும்பிகளுக்கு தேவை இதுவல்ல என்றாலும், போகப்போக ஏதாவது கதை என்று அவர்களுக்கு புரிந்தால் மட்டுமே சீரியல் சூப்பர் ஹிட்டாகும். இல்லாமல் போனால் சீரியலின் பிரைம் டைம் ரொம்பவும் வீணாகிவிடும்.
நிழல்கள் ரவி
நடிகர் கிருஷ்ணா, செய்தி வாசிப்பாளர் சரண்யா, நிழல்கள் ரவி, இயக்குநர் ராஜ் கபூர் என்று பெரிய நடிகர்கள் பட்டாளம் இருந்தாலும்,கதை இன்னும் பிடிபடாததால் பார்க்கும் சுவாரஸ்யம் இன்னும் சீரியல் ஆர்வலர்களுக்கு ஏற்படவில்லை. நிழல்கள் ரவியை வைத்து இப்போதைக்கு கதை நகர்கிறது என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது.
மாறுபட்ட சீரியல்
ரன் முற்றிலும் வேறு பாணியில் பயணிக்கிறது. இந்த வித்தியாசம் வரவேற்கத் தக்க ஒன்றுதான் என்றாலும், மக்களின் விருப்பத்திலிருந்து சற்றே திசை மாறிப் போனாலும், பார்வையாளர்களை இழக்க நேரிடும். ஆனால்,அதே சமயம் இது போன்ற வித்தியாசமான சீரியல்கள் புதிய ட்ரண்டை உருவாக்கி மக்களின் மனதைக் கவரவும் மெனெக்கெட வேண்டும். அப்படி கதை நகர்ந்தால் வெற்றி உறுதி.