ரோஜா ரோஜா.. காலம் கடந்தும் ஒலிக்கும் கலை! - மீண்டும் ட்ரெண்டாகும் பாடகர் சத்தியனின் குரல்! சோகத்துக்கு பின்னால் சந்தோஷம்
சென்னை: சில கலைஞர்கள், அவர்கள் படைத்த கலைக்குக் காலம் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. எவ்வளவு வருடங்கள் ஆனாலும், அவர்களுடைய உழைப்பு ஒருநாள் அங்கீகரிக்கப்படும். அப்படிப்பட்ட ஒரு கலைஞர்தான் பாடகர் சத்தியன். சில வருடங்களுக்கு முன்பு அவர் பாடிய ஒரு பாடல், இப்போது இணையத்தில் ட்ரெண்டாகி, புதிய ரசிகர்களையும் சென்றடைந்துள்ளது.

யார் இந்த பாடகர் சத்தியன்
சத்தியன் மகாலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் பாடியவர். தமிழில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வெற்றிப் பாடல்களை இவர் பாடியுள்ளார். "வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்" படத்தில் இடம்பெற்ற "கலக்கப் போவது யாரு", "அறிந்தும் அறியாமலும்" படத்தில் இடம்பெற்ற "சில் சில்", மற்றும் "பாஸ் என்கிற பாஸ்கரன்" படத்தின் தலைப்புப் பாடல் போன்ற பல வெற்றிப் பாடல்களுக்குச் சொந்தக்காரர். தனது கடின உழைப்பாலும் திறமையாலும், அவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தாலும், இவரைப் பற்றிப் பெரிய அளவில் யாரும் கண்டுகொள்ளவில்லை.
சாதக பறவைகள் - ரோஜா ரோஜா
பாடகர் சத்தியன், தனது திறமையை மேடைப் பாடகராகவே முதலில் வெளிப்படுத்தினார். அப்போது, சங்கரின் சாதகப் பறவைகள் மற்றும் லக்ஷ்மன் ஸ்ருதி போன்ற இசைக்குழுக்களுடன் இணைந்து பல மேடை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் அவர் 1999 ஆம் வருடத்தில் பாடிய 'ரோஜா ரோஜா' பாடல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்பாடல், உன்னிகிருஷ்ணன் குரலில் 'காதலர் தினம்' படத்தில் இடம் பெற்றது. ஆனால், சத்தியனின் இந்த மேடைப் பாடல் ரசிகர்களைக் கவர்ந்து, இன்று ட்ரெண்டிங் பாடலாக மாறியுள்ளது. இது சத்தியனின் குரலுக்கு இருக்கும் தனித்துவமான ஈர்ப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் ட்ரெண்ட்
ஒரு கலைஞனின் உழைப்பு ஒருபோதும் வீணாகாது என்பதற்கு பாடகர் சத்தியன் ஒரு சிறந்த உதாரணம். பல வருடங்கள் இவருடைய திறமை பெரிதாகப் பேசப்படாத நிலையில், இப்போது ஒரு வீடியோ மூலமாக இவருடைய குரலின் சிறப்பு உலகெங்கும் உள்ள ரசிகர்களைச் சென்றடைந்துள்ளது. இது சத்தியனுக்குக் கிடைத்த அங்கீகாரம் மட்டுமல்ல, திறமையுள்ள கலைஞர்களுக்கு எப்போதும் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் சத்தியன் பேசும்போது தான் 200க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருந்தாலும் எனக்கு சரியான அங்கீகாரமும் வாய்ப்பும் இப்போது இல்லாததால் தான் ஹோட்டலில் வேலை பார்த்தேன், விவசாயம் பார்த்தேன் என்று அதில் தனக்கு கிடைத்த கஷ்டங்கள் குறித்தும் கண் கலங்கி பேசி இருந்தார். பலருடைய மனதை கவர்ந்த பாடலுக்கு சொந்தக்காரரான இவர் மீண்டும் பாடல்கள் பாட வேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. தன்னுடைய பாடல்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாவதை அவர் சந்தோஷமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். 1999 ஆம் ஆண்டு அவர் பாடிய ரோஜா ரோஜா பாடலும் இப்போது அவர் பாடிய பாடலும் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications