ஹீரோயின்கள் கண்டபடி டிரஸ் உடுத்தினால் உங்களுக்குதான் பிரச்சினை.. நடிகர் சர்ச்சை பேச்சு
சென்னை: பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் 'தண்டோரா' வரும் டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி, படம் பற்றிய பேச்சை விட, சிவாஜி பேசிய கருத்துகளால் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய சிவாஜி, பெண்களின் உடைகள், க்ளாமர் மற்றும் சுதந்திரம் குறித்து தனது தனிப்பட்ட பார்வையை பகிர்ந்தார். "பெண்களின் அழகு சேலையில் தான் தெரிகிறது, அங்கங்கள் தெரியும்படி உடைகள் அணிவது பிரச்சனையை வரவழைக்கும்" போன்ற கருத்துகளை அவர் வெளிப்படுத்தினார்.

மேலும், ஹீரோயினிகள் கண்டபடி உடைகள் அணிந்தால் நீங்கள் தான் பிரச்சனையை சந்திக்க வேண்டி இருக்கும் என்னை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம், நீங்கள் எடுத்துக் கொண்டாலும் எனக்கு பிரச்சனை இல்லை. உங்கள் அழகு சேலையில்தான் உள்ளதே தவிர அங்கங்கள் தெரியும்படி அணியும் ஆடையில் இல்லை. சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என அவர் பேசியது, பலரால் பெண்களை கட்டுப்படுத்தும் மனநிலை என விமர்சிக்கப்பட்டது.
இந்த பேச்சு வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக ஊடகங்களில் தீவிர விவாதங்கள் தொடங்கின. குறிப்பாக பெண்கள் உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல ரசிகர்கள், சிவாஜியின் கருத்துகளை கடுமையாக எதிர்த்து பதிவுகள் வெளியிட்டனர்.
"ஒரு பெண் என்ன அணிய வேண்டும் என்பதை ஒரு ஆண் தீர்மானிக்க முடியாது", பெண் சுதந்திரத்தை ஒழுக்கம் என்ற பெயரில் குற்றம் சாட்டுவது தவறு,அழகு, மரியாதை, பண்பு - இவை உடையுடன் தொடர்புடையவை அல்ல என பலரும் சமூக வலைத்தளங்களில் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
சிலர் மேலும் கடுமையாக, "இது ஒரு நடிகரின் தனிப்பட்ட கருத்து என்ற பெயரில், பெண் சுயாதீனத்தை கேள்விக்குள்ளாக்கும் பேச்சு" என விமர்சித்துள்ளனர். இந்நிலையில், பெண்கள் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள், சிவாஜி தனது பேச்சுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
மற்றொரு தரப்பில், சிலர் சிவாஜியின் கருத்தை "அவரது பார்வை" என சமரசமாக எடுத்துக் கொள்ள முயன்றாலும், அதிகமானோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, சினிமா மேடைகள் பொறுப்புணர்வுடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், பொதுவெளியில் பேசப்படும் வார்த்தைகள் சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் பலர் நினைவூட்டுகின்றனர்.
'தண்டோரா' படம் வெளியீட்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்த சர்ச்சை படத்தின் ப்ரோமோஷனுக்கு பஞ்சாயத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications