மகளின் மஞ்சள் நீராட்டு விழா.. மேடையில் வடிவேல் பாலாஜியின் போட்டோ..நெகிழ்ச்சியுடன் வாழ்த்திய புகழ்
சென்னை: மறைந்த வடிவேல் பாலாஜியின் மகள் சத்ய ஸ்ரீயின் மஞ்சள் நீராட்டு விழாவில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு நேரில் வாழ்த்தினர். குக்கு வித் கோமாளி புகழ், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் உள்ளிட்ட பல சின்னத்திரை பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்தினர். அண்ணன் இருந்திருந்தால் பிரம்மாண்டமாக விழாவை நடத்தியிருப்பார் அவர் இல்லாமல் போய் விட்டாரே என்று விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
விஜய் டிவியில் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் வடிவேல் பாலாஜி. முன்னணி காமெடி நடிகர் வடிவேலுவை நகைச்சுவையில் பின்பற்றும் பாலாஜி, அவரைப் போன்றே முகச் சாயலும் கொண்டவர். சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த இவர் திரைப்படங்களிலும் காமெடி நடிகராக நடித்து வந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல் நலக்குறைவினால் காலமானார். அவரது மரணம் சின்னத்திரை நடிகர்கள், ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அப்போது இவரது குடும்பத்திற்கு நிதி உதவி செய்வதாக அவர் வேலை செய்த தொலைக்காட்சி நிறுவனமும் தெரிவித்திருந்தது.

வடிவேல் பாலாஜிக்கு இரண்டு குழந்தைகள் மகன் ஸ்ரீகாந்த், மகள் சத்யஸ்ரீ. இருவரின் கல்வி செலவுகளை முழுவதுமாக தான் ஏற்றுக் கொள்வதாக நடிகர் சிவகார்த்திகேயன் அவர் குடும்பத்தினரிடம் வாக்களித்தார். அதனை நிறைவேற்றியும் வருகிறார். வடிவேல் பாலாஜியின் மரணத்தில் இருந்து மீள முடியாத நிலையில் இருந்தாலும் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை அவரது ஆசியுடன் நடத்தியுள்ளனர்.
மஞ்சள் நீராட்டு விழா மேடையில் வடிவேல் பாலாஜியின் படம் இடம் பெற்றிருந்தது. அதனை பார்த்த விழாவிற்கு வந்த சின்னத்திரை பிரபலங்கள் நெகிழ்ச்சியடைந்தனர். வடிவேல் பாலாஜியுடன் சின்னத்திரையில் கூடவே பயணம் செய்த புகழ் நேரில் வந்திருந்து வாழ்த்தி ஆசி வழங்கினார்.
ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் ஆகியோரும் நேரில் வாழ்த்தினர். நடன கலைஞர்கள், நகைச்சுவை கலைஞர்கள் பலரும் வந்திருந்தனர்.
உடல்நலக்குறைவினால் வடிவேல் பாலாஜி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். அவரது மறைவிற்கு பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு எளிமையான முறையில் அவரது மகளின் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. வடிவேல் பாலாஜியின் அன்பிற்கு பாத்திரமானவர் புகழ். சினிமா, சின்னத்திரையில் நன்றாக புகழடைய வேண்டும் என்று நினைத்தவர் வடிவேல் பாலாஜி.
ஆரம்பகாலகட்டத்தில் பைக் மெக்கானிக்காக பணியாற்றி வந்த புகழ் சின்னத்திரை, சினிமா என காமெடி நிகழ்ச்சிகளில் தான் இந்த அளவு பிரபலம் ஆனதற்கு வடிவேல் பாலாஜியும் ஒரு முக்கிய காரணம் என பல மேடைகளில் கூறி இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்பு டா நிகழ்ச்சியில் வடிவேல் பாலாஜி, ராமர், அமுதவாணன் ஆகியோருடன் இணைந்து காமெடி ரோல்களில் நடித்து வந்தவர் புகழ். இந்நிகழ்ச்சியில் இவர் அந்நியனாக நடித்ததற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கினார். குக்கு வித் கோமாளிதான் புகழின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பல திரைப்பட வாய்ப்புகளையும் பெற்றுத்தந்தது.

கடந்த ஆண்டு புகழுக்கு தனது காதலியுடன் திருமணம் நடந்தது. அப்போது வடிவேல் பாலாஜியின் புகைப்படத்தின் முன்பு நின்று ஆசி பெற்றார். இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மாமா... உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணத்துல அடுத்த கட்டத்துல அடியெடுத்து வைக்கிறேன். உங்க ஆசிர்வாதம் எப்பவும் எங்க ரெண்டு பேருக்கும் இருக்கும்னு நம்பறேன். எப்பவும் என் கூட தான் இருப்பீங்க, கண்டிப்பா நீங்க தான் எனக்கு மகனா வந்து பொறக்கணும்னு அந்த கடவுள வேண்டிக்கிறேன் மாமா" என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் வடிவேல் பாலாஜியின் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் மறக்காமல் பங்கேற்று வாழ்த்தியிருக்கிறார். வடிவேல் பாலாஜி மட்டும் உயிரோடு இருந்திருந்தால் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தியிருப்பார் என்று பங்கேற்று வாழ்த்திய அனைவரும் நெகிழ்சியுடன் கூறினர்.












Click it and Unblock the Notifications