சன் டிவியில் மே 19 முதல் டாப் குக்கு டூப் குக்கு புதிய நிகழ்ச்சி! கொண்டாடும் வெங்கடேஷ் பட் ரசிகர்கள்!
சென்னை: செஃப் வெங்கடேஷ் பட்டின் டாப் குக்கு டூப்பு குக்கு என்ற நிகழ்ச்சி சன் டிவியில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகிறது. இனி ஒரே அமர்க்களமாக இருக்க போகிறது.
அக்கார்டு ஹோட்டலில் சிஇஓவாக இருப்பவர் வெங்கடேஷ் பட். இவர் விஜய் டிவியில் சமையல் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதயம் தொட்ட சமையல் நிகழ்ச்சி மூலமும் பிரபலமடைந்தார். தனது யூடியூப் சேனலில் நிறைய எளிய சமையல் குறிப்புகளை கொடுத்து வருகிறார்.

இவர் அசைவ உணவை உண்ண மாட்டார். ஆனால் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் சமைக்கும் அசைவ உணவை நுகர்ந்து பார்த்தே அதில் உள்ள நிறை குறைகளை சொல்லிவிடுவார். இவர் ஆசான் மெமோரியலில் கேட்டரிங் படித்தவர். பிறகு சிங்கப்பூரில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்திருந்தார்.
1994 ஆம் ஆண்டு ஹோட்டல் சோழா ஷெரட்டனில் பட் , தனது பணியை தொடங்கினாரம். இதையடுத்து பெங்களூரில் உள்ள லீலா பேலஸில் 2001 ஆம் ஆண்டு பணியாற்றினார். இதையடுத்து ஊட்டி, புதுவையில் உள்ள அக்கார்டு மெட்ரோபாலிட்டனில் பட் தற்போது சிஇஓவாக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் செஃப் தாமோதரனுடன் இணைந்து குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியின் நடுவராக கலந்து கொண்டார். இதுவரை 4 சீசன்களை கடந்துள்ளது இந்த நிகழ்ச்சி. இதில் புகழ், பாலாவுடன் வெங்கடேஷ் பட் அடிக்கும் லூட்டியை பார்த்தால் சிரிப்பு சிரிப்பாக வரும். அதே நேரத்தில் தனது பணியிலும் கவனமாக இருந்து நடுவராக செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 5யிலிருந்து வெங்கடேஷ் பட் விலகினார். இதைத் தொடர்ந்து ரசிகர்கள் பட் சார் இல்லாமல் குக் வித் கோமாளியை எப்படி பார்ப்பது என கேள்வி எழுப்பினர். இந்த நிலையில்தான் பட், சன் டிவியில் வேறொரு நிகழ்ச்சியில் கமிட் ஆனது தெரிய வந்தது. அதற்கான புரோமோக்களை ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்து வருகிறார்.
டாப் குக்கு டூப்பு குக்கு என்ற பெயர் கொண்ட அந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்தான் நடுவர். இவருடன் ஜி.பி.முத்து, மோனிஷா, பரத், தீபா உள்ளிட்டோரும் சன் டிவிக்கு வந்துவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. இதில் ஸ்டென்ட் நடிகர் தீனா கலந்து கொள்ளும் ப்ரோமோ வெளியாகி சிரிப்பை வரவழைத்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பின்னி கிருஷ்ணகுமார், சிங்கம் புலி, நடிகைகள் சோனியா அகர்வால், ஐஸ்வர்யா தத்தா, கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி, வில்லன் நடிகர் தீனா என மொத்தம் 9 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அந்த ப்ரோமோவில் "இங்கு நான்தான் கிங்! நான் வச்சதுதான் சட்டம்" என வெங்கடேஷ் பட் சொல்கிறார். இதில் போட்டியாளர்கள், டூப்புகளின் அலப்பறை இருக்கிறது. இந்த நிகழ்ச்சி வரும் 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வாரந்தோறும் பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி போரடிப்பதாகவும் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் சன் டிவிக்கு சேனலை மாற்றுவதாகவும் நெட்டிசன்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications