சிம்புவின் அரசன் படத்தில் விஜய் சேதுபதிக்கு இதுதான் கேரக்டரா? வச்சு மரனுக்காக உடைந்த சபதம்! எகிறும் எதிர்பார்ப்பு
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கவிருக்கும் புதிய படம் 'அரசன்' மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இன்று திடீரென நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தி ரசிகர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதில் மிகவும் சுவாரசியம் என்னவென்றால், விஜய் சேதுபதிக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரம் குறித்த தகவல்தான்.

மீண்டும் இணையும் கூட்டணி
'செக்க சிவந்த வானம்' படத்திற்கு பிறகு சிம்புவும் விஜய் சேதுபதியும் மீண்டும் இப்படத்தில் இணைகிறார்கள். இதில் முக்கியமாக, சிம்புவுக்கு இணையான ஒரு வெயிட்டான கதாபாத்திரத்தைத்தான் விஜய் சேதுபதிக்கு வெற்றிமாறன் வழங்கியுள்ளாராம்.
விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது. அது என்னவென்றால், வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' படத்தில் அமீர் நடித்த 'ராஜன்' கதாபாத்திரம் எப்படி அதிரடியாக இருந்ததோ, அதுபோன்ற ஒரு தரமான ரோல் தான் 'அரசன்' படத்திலும் விஜய் சேதுபதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
உடைந்த விஜய் சேதுபதியின் சபதம்
நடிகர் விஜய் சேதுபதி சமீபகாலமாக மற்ற ஹீரோக்கள் படங்களில் நடிக்க மாட்டேன், வில்லன் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க மாட்டேன் என்ற சபதம் போன்றதொரு முடிவை எடுத்திருந்தார். ஆனால், தற்போது இந்த முடிவை திடீரென மாற்றி கொண்டு அரசன் படத்தில் சிம்புவுடன் இணையக் காரணம் என்ன என்று ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.
வெற்றிமாறன் மீதான நம்பிக்கை
இந்த முடிவு மாற்றத்திற்கு முழுக்காரணமும் இயக்குநர் வெற்றிமாறன் தான் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் சேதுபதி வெற்றிமாறனிடம் கதைகூட கேட்கவில்லையாம். அந்தளவிற்கு வெற்றிமாறன் மீது மிகுந்த மதிப்பையும், நம்பிக்கையையும் விஜய் சேதுபதி வைத்திருக்கிறார். இவர்கள் கூட்டணி ஏற்கனவே 'விடுதலை 1 மற்றும் 2' படங்களில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

முக்கிய கதாபாத்திரம்
வெற்றிமாறன் மீதான நம்பிக்கையை காப்பாற்றும் வகையிலேயே, விஜய் சேதுபதிக்கு சிம்புவுக்கு இணையான, ரசிகர்கள் கொண்டாடும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை வழங்கியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
விரைவில் படப்பிடிப்பு
'அரசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்க இருந்த நிலையில், சில காரணங்களால் தாமதமாகியுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் கோவில்பட்டியில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றிமாறன் மற்றும் படக்குழுவினர் லொகேஷனில் இருப்பதாகவும், அனைத்தையும் தயார் செய்துவிட்டு படப்பிடிப்பைத் துவங்குவார்கள் எனவும் கூறப்படுகிறது. மேலும், விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்தாண்டு கோடைக்காலம் அல்லது ஜூன் மாதத்திற்குள் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications