நான் செஞ்சது தப்புதான்! அந்த வன்முறை தவறு! மன்னிப்பு கேட்டேன் வெளிப்படையாக பேசிய விஜய் சேதுபதி
சென்னை: தமிழ் சினிமா உலகின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிஔ, தனது குடும்ப அனுபவங்கள் குறித்து 'நீயா நானா' நிகழ்ச்சியில் வெளிப்படையாகப் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது மனைவி உடனான ஒரு கடுமையான சண்டை மற்றும் அதற்காக அவர் பட்ட வருத்தம் குறித்த அவரது நேர்மையான பேச்சு, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

கணவன் மனைவிக்கு இடையே சண்டை
சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதி, இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'நீயா நானா' நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்தப் படம் முழுக்க முழுக்க குடும்பக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.
அந்நிகழ்ச்சியில் தனது சொந்த வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி, "இதை நான் பொது மேடையில் சொல்லலாமா என்று தெரியவில்லை. ஒரு முறை நான் என்னுடைய மனைவியின் கழுத்தைப் பிடித்து சுவற்றில் அப்படியே வைத்து விட்டேன். அதற்காக நான் ரொம்ப வருத்தப்பட்டேன். என்னதான் இருந்தாலும் நான் அவள் மீது கை வைத்திருக்கக் கூடாது. கை வைத்த அந்த நிமிடத்தில் நான் செய்ததற்கு மன்னிப்பு கேட்டு விட்டேன். இருந்தாலும் சரி, தப்பு எல்லாம் இரண்டாம் பட்சம் தான். மேலே கை வைத்தது ரொம்ப தப்பு என்று உணர்ந்தேன். அதற்காக நான் ரொம்பவே ஃபீல் பண்ணேன்," என்று கூறினார்.
சினிமா கனவால் வந்த குடும்ப சண்டை
மேலும், கணவன் மனைவிக்கு இடையே சண்டை எதற்காக வருகிறது என்று தெரியாது என்றும், சில சமயங்களில் எதனால் சண்டை போட்டோம் என்று கூட புரியாது என்றும் விஜய் சேதுபதி குறிப்பிட்டார். தான் சினிமாவுக்குள் வருவதற்கு முன்னரே திருமணம் ஆகிவிட்டதாகவும், தான் சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்பது தனது மனைவிக்குத் தெரிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதைப் பார்த்துவிட்டு அவருடைய மனைவி கோபத்தில் மகனுடன் வீட்டை விட்டு கிளம்பி விட்டாராம்.
"அப்புறம் நான் அவளிடம் போய் அந்த போட்டோவை எல்லாம் கிழித்து போட்டுவிட்டு, இனிமேல் சினிமாவுக்கு முயற்சி செய்ய மாட்டேன் என்று வயிற்றில் சத்தியம் எல்லாம் பண்ணிவிட்டு கூட்டிட்டு போயிட்டேன்," என்று கூறினார். பின்னர், "அதற்குப் பிறகு வேறு போட்டோ பிரிண்ட் போட்டு எல்லோருக்கும் கொடுத்து விட்டேன். அந்தப் பையன் தான் இப்போ ஹீரோ ஆகி விட்டான்," என்று தனது மகனின் சினிமா பிரவேசம் குறித்தும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

விஜய் சேதுபதியின் திரைப்பயணம்
விஜய் சேதுபதி, தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'மகாராஜா' படம் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனைகளையும் செய்தது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி அவர்கள் வெற்றிமாறன் இயக்கிய 'விடுதலை 2' என்ற படத்தில் நடித்து இருந்தார். முதல் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து இரண்டாம் பாகமும் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று இருந்தது. இதை அடுத்து விஜய் சேதுபதி அவர்கள் மிஸ்கின் இயக்கும் 'ட்ரெயின்' என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பும் வெளியாகியிருந்தது. இந்தப் படம் பான் இந்திய அளவில் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
விஜய் சேதுபதியின் இந்த வெளிப்படையான பேச்சு, அவரது தனிப்பட்ட வாழ்வில் அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் தனது குடும்பத்தின் மீதான அவரது பற்று ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. இது அவரது மனித நேயமிக்க குணத்தையும், தான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளும் நேர்மையையும் காட்டுவதாகப் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications