பாரதிராஜா உயில் எழுதினாரா? ஜனனி, நந்தனா ஏன் சண்டை போட்டாங்க தெரியுமா? 500 கோடி ரூமருக்கு சகோதரர் நச்
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் குடும்பத்திற்கு சொத்துத் தகராறு ஏற்பட்டுள்ளதாகப் பரவிய வதந்திகள், அவரது மகள் ஜனனி மற்றும் மருமகள் நந்தனா இடையே நடந்த வாக்குவாதத்திற்கான அசல் பின்னணி மற்றும் ஊடகங்களின் செயல்பாடுகள் குறித்து அவரது சகோதரர் ஜெயராஜ் நேர்காணலில் ஒன்றில் விரிவாகவே பேசியிருக்கிறார். அத்துடன், தன்னுடைய அண்ணனுடன் எப்படி திரைப்படங்களில் பணியாற்ற துவங்கினார் என்பதையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஜெயராஜ் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், "அண்ணனின் முதல் திரைப்படமான '16 வயதினிலே' தொடங்கி 'கிழக்கே போகும் ரயில்' வரை ராஜ் கண்ணுதான் தயாரிப்பாளராக இருந்தார். அந்தச் சமயத்தில் நான் அரசு அச்சகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

பணப்பரிவர்த்தனைகள்
அதன் பிறகு 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தின் போது, பிரபல தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி அவர்கள் என்னிடம் வந்து, 'அங்கு என்ன செய்யப் போகிறாய்? அடுத்து நீங்கள்தான் சொந்தப் படம் எடுக்க வேண்டும், அதற்கு இப்போதே தொழில் கற்றுக்கொள்' என்று கூறித் தனது கம்பெனியில் என்னைச் சேர்த்துக் கொண்டார். அந்தப் படத்தில் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் தயாரிப்பு நிர்வாகப் பணிகளை ஆர்.ஜியின் மச்சானுடன் உடனியிருந்து நான் முழுமையாகக் கற்றுக்கொண்டேன்.
அண்ணனின் சொந்தத் தயாரிப்பில் உருவான 'புதிய வார்ப்புகள்' திரைப்படத்தின் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் தேனி சுற்றுவட்டார லொகேஷன்களை நான் தான் முழுமையாகக் கவனித்துக் கொண்டேன். அப்போது மிகக் குறைந்த பட்ஜெட்டில், வெறும் 96,000 ரூபாயில், 28 ரோல் பிலிம்களை மட்டும் பயன்படுத்தி, 32 நாட்களில் அந்தப் படத்தின் ஷூட்டிங்கை முடித்தோம்.
சென்னையிலிருந்து ஒரு லட்ச ரூபாய் எடுத்துச் சென்று, ஷூட்டிங், சாப்பாடு, தங்குமிடம், பேட்டா என அனைத்துச் செலவுகளும் போக மீதி 14,000 ரூபாயைக் கையோடு திரும்பக் கொண்டு வந்தேன். அந்த அளவிற்கு மிகச் சிக்கனமான தயாரிப்பு முறையை நாங்கள் கையாண்டோம்.
கேஷ் டீலிங் - நினைவுகள்
அன்றிலிருந்து அண்ணன் பாரதிராஜாவின் அத்தனை சொந்தப் படங்களின் நிர்வாகம் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை நான் ஒருவன் மட்டுமே கவனித்து வந்தேன்.
இந்த துக்கச் சூழலில் நான் இருக்கும்போது, கோடி கணக்கான பழைய நினைவுகள் என் மனதிற்குள் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் சூரியன் மறைந்து இருட்டாகும் அந்தச் சமயத்தில், பழைய நினைவுகள் அனைத்தும் என் மனதிற்குள் ஒரு பூகம்பம் போலக் கிளம்புகின்றன. அதனை என்னால் தாங்கிக் கொள்ளவே முடிவதில்லை
உயில் எழுதினாரா பாரதிராஜா
ஆனால், துக்க வீட்டில் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுபவர்கள் குறித்தும், சில ஊடகங்கள் குறித்தும் நான் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். எல்லா வீடுகளிலும், குறிப்பாகத் துக்க வீடுகளில் ஒரு பதற்றமான சூழலில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் நடப்பது இயல்புதான்.
அதை இந்த ஊடகங்கள் அப்படியே வீடியோ எடுத்து, கட் செய்து, பூதாகரமாக்கி, 'மருமகளும் மகளும் சண்டை போட்டுக் கொண்டார்கள்' என்று கேவலமாக ஒளிபரப்புகிறார்கள். இதைக் கேட்பதற்கே அசிங்கமாக இருக்கிறது. எங்கள் குடும்பத்திற்குள் எந்த வேறுபாடும் இல்லை, எல்லாரும் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.
ஊடகங்களுக்கு அசிங்கமாக இல்லையா
ஒரு மாமனிதர் இறந்து ஒட்டுமொத்த நாடும் துக்கத்தில் இருக்கும்போது, துக்க வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்தி ஊடகங்கள் ஹைலைட் செய்வது எவ்வளவு கேவலமான புத்தி? உங்களுக்குச் சேனல் நடத்துவதற்கு வெட்கமாக இல்லையா? உங்கள் குடும்பத்தைப் பற்றி யாராவது இப்படிப் பேசினால் சும்மா இருப்பீர்களா? அங்கே வாக்குவாதம் நடந்தபோது கேமராக்களைத் தவிர்த்திருக்க வேண்டும் அல்லது எடிட் செய்யும்போது அந்தப் பகுதியையாவது நீக்கியிருக்க வேண்டும்.
அண்ணன் பாரதிராஜா உயில் எழுதத் தவறிவிட்டாரா என்று கேட்கிறார்கள். அவர் ஏற்கனவே எல்லாவற்றையும் தெளிவாக எழுதி வைத்துவிட்டார். தனக்குப் பிறகும், தன் மனைவிக்குப் பிறகும் அந்தச் சொத்துக்கள் யாருக்குப் போக வேண்டும் என்பதை அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதனால் அங்கு சொத்துக்காக எந்தப் பிரச்சனையும் இல்லை.
நந்தனா - ஜனனி சண்டை இதுதான்
அங்கே அண்ணன் மகள் ஜனனிக்கும், மருமகள் நந்தனாவிற்கும் இடையே அந்த இடத்தில் வாக்குவாதம் நடந்தது உண்மைதான், அதை நான் மறுக்கவில்லை. ஆனால், அது ஊடகங்கள் சொல்வது போல சொத்துக்காக நடந்த சண்டை அல்ல.
மருமகள் நந்தனாவின் பெற்றோர் கோழிக்கோட்டிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து, அங்கிருந்து கார் மூலம் இறுதிச் சடங்கிற்கு வந்ததால் அவர்கள் வந்து சேர மிகவும் தாமதமாகிவிட்டது. 'அண்ணனின் இறுதி முகத்தைப் பார்க்க காலையிலேயே வந்து சேர்ந்திருக்க வேண்டாமா?' என்ற ஆதங்கத்தில் ஜனனி பேசியதால் ஏற்பட்ட சின்ன வாக்குவாதமே தவிர, இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை" என்று ஜெயராஜ் தெளிவுபடுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications