58 வயதில் ரிட்டையராகி! பல்லெல்லாம் கொட்டி! ரஜினியின் அன்னை ஓர் ஆலயத்தின் நாயகிக்கு இத்தனை குழந்தைகளா?
சென்னை: ரஜினிகாந்துடன் அன்னை ஓர் ஆலயம் படத்தில் நடித்த நடிகை ரதி தனது 81 ஆவது வயதில் காலமானார். இந்த படத்தில் தனது தாய்ப்பாசத்தை அருமையாக வெளிப்படுத்தி நடித்திருப்பார். யார் அந்த ரதி என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: ரதி' என்கிற பெயருடைய அந்த நடிகை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரோடும் நடித்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினியோடும் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆரோடு நடித்த படத்தில் எம்.ஜி.ஆரின் அன்புமிக்கவர் இந்த நடிகை. கதைப்படி எம்.ஜி.ஆர் இவரால் மறு வாழ்வு பெறுவார்.

ஆனால் ரஜினியோடு இவர் நடிக்கும் போது இவருக்கு வயதாகி விட்டது. சக நடிகரான கணேஷுக்கு தாயாக நடிக்கும் வாய்ப்பே கிடைத்தது. இவரின் பாசப் போராட்டம் அந்தப் படம் வந்த போது கண்களில் கண்ணீர் வரவழைக்கும். படத்தின் க்ளைமேக்ஸில் ரஜினியை வாழ்த்தி ஆசி தரும் போது சிறுவர்கள் முதல் பெரியவர் வரை குஷியோடு வீட்டுக்குப் போனார்கள்.
அப்படிப்பட்ட ரதி 58-வது வயதில் ரிட்டயர்டானார். வயோதிகம் வாட்டி எடுத்தது. சினிமாத் துறையினரால் அன்பாக கவனிக்கப்பட்ட, கை தட்டப்பட்ட, விசிலடிக்கப்பட்ட ரதி வயது மூப்படைந்து பற்கள் கொட்டிப்போனது. இதனால் சாப்பிடக்கூட முடியாமல் 81 வயதில் 2018ல் மரணமடைந்தார். இவருக்கு ஏராளமான வாரிசுகள். ஒருவர் குருவாயூர் கோவிலிலும், ஒருவர் பூனாவின் கோவிலிலும் இருக்கிறார்கள். ரதியின் தாய்ப்பாசம் இன்றும் நம் மனக்கண்ணில் இருக்கிறது.
யார் இந்த ரதி? நல்லநேரம் படத்தில் எம்.ஜி.ஆருக்கு வித்தைக்காட்டி சம்பாதித்து மறுவாழ்வு கொடுத்ததும், அன்னை ஓர் ஆலயம் படத்தில் ரஜினியிடம் தன் மகன் கணேஷை பறி கொடுத்து விட்டு லாரியை துரத்தி ஓடும் தாயாகவும் நடித்த யானையார் ரதி தான் அந்த நடிகை ரதி.
படத்தில் ரஜினி குட்டிகளை தாயிடமிருந்து பிரித்து விற்கும் வேட்டைக்காரன் விஜய். அவரது அம்மாவுக்கு இது பிடிக்காது. "விலங்குகளுக்கும் பாசம் உண்டு"இது தாயின் கூற்று. விலங்காவது..பாசமாவது...இது ரஜினி. "ஒரு நாள் உனக்குப் புரியும்" என்பார் அம்மா. அவர் சொன்னது போல் அம்மா சாகும் போது தான் வைத்த கெணியில் தானே விழுந்திருப்பார் ரஜினி. அம்மா இறந்ததும் தாய்ப்பாசத்தின் அழுத்தம் புரியும்.
தன் குழந்தை கணேஷை இழந்த தாய் ரதியிடம் கொண்டு போய் சேர்ப்பது தான் மிச்சக்கதை. படம் ரிலீசான போது கணேஷ் என்கிற குட்டியானையின் நடிப்பை ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள். கதைப்படி குட்டியானை கணேஷ் ஒரு தியேட்டருக்குள் ஓடி ஒளியும். அந்த தியேட்டரில் எம்.ஜி.ஆரின் 'நல்ல நேரம்' படத்தின் பாட்டு ஓடிக் கொண்டிருக்கும். யானை கணேஷ் திரையில் யானைகளை பார்த்துவிடும். உடனே உற்சாகமடைந்து திரைப்படத்தை உண்மையென நம்பி திரையை கிழித்துவிடும்.
இதில் நமக்குத் தெரியாத விஷயம் 'ஆகட்டுன்டா தம்பி ராஜா...நடராஜா..' பாட்டில் வரும் மூன்று யானைகளில் ஒன்று ரதி யானை. குட்டி யானை கணேஷின் அம்மாவாக நடித்ததும் ரதி யானை தான். திரையில் கணேஷ் அம்மாவைப் பார்த்ததும் ஓடி வந்தது, திரையை கிழித்தது லாஜிக் உண்டு தானே.
So...தாய்ப்பாசம் யானைக்கும் உண்டு...ரதி 25க்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்றிருக்கிறது. சினிமாவில் நடித்து, வேலை பார்த்து சாப்பிட்டிருக்கிறது. இந்த மனுஷப்பயல்கள் இந்த யானையிடம் பாடம் கற்க வேண்டும். கடைசி காலங்களில் முதுமலை விலங்குகள் காப்பகத்தில் உயிரிழந்து புதைக்கப்பட்டது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications