ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்த நடிகை யார்? கே.பாலசந்தர் கேட்டதுமே! சூப்பர் ஸ்டார் சொன்னது யாரை?
சென்னை: ரஜினிகாந்துக்கு பிடித்த நடிகை யார் என இயக்குநர் கே.பாலசந்தர் கேட்ட போது, அதற்கு ரஜினி, சற்றும் யோசிக்காமல் முள்ளும் மலரும் படத்தில் நடித்த படாஃபட் ஜெயலட்சுமி என தெரிவித்திருந்தார். அப்படிப்பட்ட படாஃபட் ஜெயலட்சுமி தனது 22 வயதில் தற்கொலை செய்து கொண்டது ஏன்?

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: படாஃபட் ஜெயலக்ஷ்மியிடம் ஒரு புத்திசாலி அழகு இருந்தது.
எத்தனை படங்கள் நடித்திருந்தாலும் படாஃபட்டின் நடிப்பில் முதலில் கண்ணில் விரிவது 'முள்ளும் மலரும்' தான். மங்கா.... அழகிலும், அறிவிலும் மங்காதவள். கதைப்படி காளிக்கு வேலை போகவும், அதனால் கை போகவும் காரணக்காரி மங்கா தான்.
அவள் மட்டும் காளியின் வாட்சை எடுத்துக் கொண்டு வராமல் இருந்திருந்தால்... காளியும் வின்ச்சை விட்டு விட்டு மங்காவை துரத்திக் கொண்டு வராமல் இருந்திருந்தால்.... காளியிடமிருந்து தப்பிக்க ஆற்றுக்குள் இறங்காமலிருந்திருந்தால்......நிச்சயம் காளிக்கு வேலையும் போயிருக்காது. கையும் போயிருக்காது.
மங்காவுக்கு அந்த உறுத்தலும், உண்ட உணவுக்கான நன்றியும் இருந்து கொண்டே இருந்தன. திருவிழாவில் மங்காவுக்கும், வள்ளிக்கும், ஊருக்கும் முன்னால் காளி ஒற்றைக்கையால் உறியடிக்க முடியாமல் போக ஊரே 'ஒத்தக்கையா.... ஒத்தக்கையா....' எனக் கூவி சிரிக்கும் போது சீறிக் கொண்டு வருவது அங்கு வள்ளி அல்ல.... மங்கா தான்....
"இவரைப் பார்த்து சிரிச்சீங்களே இப்போ சிரிங்கடா... பொட்டப் பசங்களா..."ன்னு மங்கா சீறும் போது அவளின் ஆத்திரம் நமக்குப் புரியும். காளி பெட்டிக் கடைக்காரனுக்கு வள்ளியை மணமுடிக்க அழைத்து வந்ததும் தட்டை தட்டிவிட்டு ஆர்ப்பாட்டம் செய்வதும் மங்கா தான். அதோடு பெட்டிக் கடைக்காரனையும் நாலு பெண்களை அழைத்துப் போய் மிரட்டி விட்டு வருவதும் மங்கா தான்.
தவறு செய்வது தன் கணவன் என்றாலும் மங்கா வள்ளிக்கு அங்கே தாயாக நின்று வள்ளியின் மனம் போல் மணம் செய்து கொடுக்க திட்டம் தீட்டி செயல் படுத்துவதும் மங்கா தான்.... மங்கா தான் அங்கே, தாய், வழிகாட்டி, பாதுகாவலர், மனைவி, குடும்பத்தலைவி.... அதோடு காளியின் துண்டான அந்த கையும்........
மங்கா என்கிற அந்த அற்புத கேரக்டரை தன் நடிப்பால் அழகாக்கி இருப்பார் படாஃபட் ஜெயலட்சுமி. அந்த கிராமிய அழகு ஜெயலட்சுமியின் உடலமைப்பிலும், குரலிலும் இயல்பாகவே இருந்தன....
கே.பாலச்சந்தர் ஒரு முறை ரஜினியிடம் ஒரு மேடையில் கேட்பார். "உன்னோடு நடித்த நடிகைகளில் உனக்குப் பிடித்த நடிகை யார்?"
ரஜினி பட்டென சொல்வார், படாஃபட் ஜெயலட்சுமி.... முள்ளும் மலரும், காளி, ஆறிலிருந்து அறுபது வரை, இறைவன் கொடுத்த வரம், ராம் ராபர்ட் ரஹீம்.... போன்ற படங்களில் ரஜினியோடு நடித்திருப்பார்.
விதி படத்தில் பூர்ணிமாவை ஏமாற்றும் மோகனுக்கு ஒரு மனைவி(சத்யகலா) இருப்பார். அந்த படத்தின் தெலுங்கில் மனைவியாக படாஃபட் நடித்திருப்பார். நிஜ வாழ்க்கையில் அந்த விதி பூர்ணிமா போல காதலித்து ஏமாந்து தற்கொலை செய்து கொண்ட போது அவருக்கு வயது வெறும் இருபத்தி இரண்டு.
ஒரு நல்ல நடிகையை காதல் பலி கொண்டுவிட்டது. படாஃபட், விஜி, ஷோபா இவர்களெல்லாம் தற்கொலை செய்து வாழ்வை முடித்துக் கொள்ளும் அளவுக்கு அந்த காதலர்கள் ஒர்த்தான பீசுகளும் இல்லை.... பின் எப்படி இது நிகழ்ந்தது என்றால் ஆச்சர்யமான விதி...விதி மட்டுமே.... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications