Gouri Kishan : "கேள்வி தவறாக புரிந்துகொள்ளப்பட்டது!" கௌரி கிஷனை கேள்வி கேட்ட யூடியூபர் மன்னிப்பு
சென்னை: நடிகை கௌரி கிஷன் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பில், அவரது உடல் எடை குறித்து அவமரியாதையாக கேள்வி எழுப்பிய விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், கேள்வி கேட்ட யூடியூபர் கார்த்தி தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். கௌரி கிஷனின் துணிச்சலான பதிலடி மற்றும் திரையுலக பிரபலங்களின் ஆதரவு ஆகியவை, கேள்வி கேட்ட நபரை கடைசியில் வருத்தம் தெரிவிக்க வைத்துள்ளது.

பிரச்சனையின் ஆரம்ப புள்ளி
கௌரி கிஷண் நடிப்பில் வெளியான 'அதர்ஸ்' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தான் இந்த பிரச்சினை தொடங்கியது. படத்தின் கதாநாயகனிடம், யூடியூபர் ஒருவர், "படத்தின் பாடலில் நடிகையைத் தூக்கினீர்களே, நடிகையின் உடல் எடை என்ன?" என்ற அவமரியாதையானக் கேள்வியை எழுப்பினார். இதனை கேட்ட கௌரி கிஷன், "நீங்க எப்படி அதைக் கேட்கலாம். அதைத் தெரிஞ்சி என்ன பண்ண போறீங்க. இது முழுக்க முழுக்க பாடி ஷேமிங் (உருவக்கேலி)" எனத் தக்க பதிலடி கொடுத்திருந்தார். இதன் பிறகே, இது சமூக வலைதளங்களில் மிகப் பெரிய விவாத பொருளானது.
கௌரி கிஷனுக்கு குவிந்த ஆதரவு
உருவக்கேலிக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்த கௌரி கிஷனுக்குத் திரையுலகினர் மற்றும் அமைப்புகள் சார்பில் அமோக ஆதரவு கிடைத்தது. நடிகை ராதிகா சரத்குமார் வெளிப்படையாகக் கௌரிக்கு ஆதரவளித்து, "நீங்கள் மிகவும் தைரியமாக நிற்பதைப் பார்க்கப் பாராட்டத்தக்கது. கேள்விகேட்ட நபரைக் 'ஷங்கர்' என்று குறிப்பிட்டு, அந்த நபரைப் பிரஸ் கிளப் மற்றும் பிஆர் யூனியன் தடை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஒரு அறிக்கையை வெளியிட்டு, இந்தக் கேள்வியை வன்மையாகக் கண்டித்தார். "பத்திரிகையாளர் சந்திப்புகளில் சில வக்கிரமான நபர்கள் நடிகைகளிடம் ஏளனமாக, அவமானப்படுத்தும் வகையில் கேள்வி கேட்பது கவலைக்குரியது" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உட்பட பல கலைஞர்கள், கௌரி கிஷனுக்குத் தனிப்பட்ட முறையிலும், சமூக வலைதளங்களிலும் ஆதரவு தெரிவித்தனர்.
யூடியூபர் கார்த்தியின் மன்னிப்பு
திரைத்துறையின் தொடர் கண்டனங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்புக் காரணமாக, நடிகையிடம் கேள்வி கேட்ட யூடியூபர் கார்த்தி இன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தான் கேட்டக் கேள்வி "சாதாரணமாக கேட்கப்பட்டது. தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டது" என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும், "இந்தக் கேள்வியால் கௌரி கிஷனின் மனது நோகக் கூடாது என்றும், மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும்" அவர் கூறியுள்ளார்.
உருவக்கேலி போன்ற பெண்களுக்கு அவமரியாதையான விஷயங்களில், ஒரு நடிகை தைரியமாகக் குரல் கொடுத்ததும், ஒட்டுமொத்தத் திரையுலகமும் அவருக்குப் பின்னால் ஒன்று திரண்டதும், இதுபோன்ற சம்பவங்கள் இனி திரையுலக ஊடகச் சந்திப்புகளில் நடக்காமல் இருக்க ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ளது என்று சினிமா வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications