நடிகை பாலியல் வன்கொடுமை.. நடிகர் திலீப்பின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்த கேரள அரசு!
திருவனந்தபுரம்: தென்னிந்திய திரை உலகை உலுக்கிய நடிகை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால், நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இந்நிலையில் இந்த விடுதலையை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.
கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதனையடுத்து தொடரப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் மற்றும் சிலரை விடுவித்து எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஆண்டு, டிசம்பர் 8 அன்று உத்தரவு வழங்கியது. இந்நிலையில் இதனை எதிர்த்து, கேரள அரசு இன்று கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தனது மனுவில், விசாரணை நீதிமன்றம் குறைத்த மற்ற குற்றம் சாட்டப்பட்டோரின் தண்டனையை அதிகரிக்கவும் அரசு கோரியுள்ளது. இவ்வழக்கு தொடர்பான பல டிஜிட்டல் ஆதாரங்களை விசாரணை நீதிமன்றம் முறையாகக் கருத்தில் கொள்ளவில்லை என்றும் கேரள அரசு வாதிட்டது.
இதற்கிடையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் இருவர், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். அவர்களில், 'பல்சர்' சுனி என அழைக்கப்படும் சுனில் என்.எஸ்., தனது 20 ஆண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்யக் கோரினார். தான் ஏற்கனவே எட்டாண்டுகள், அதாவது மொத்த தண்டனையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் சிறையில் கழித்துவிட்டதாக அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
நடிகையின் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பின்னர், திரைத்துறையில் நடக்கும் பாலியல் சுரண்டல் சம்பவங்கள் குறித்து விசாரிக்க 'ஹேமா கமிட்டியை' கேரள அரசு அமைத்தது. இந்த கமிட்டி கூறிய தகவல்கள் அனைத்தும் மொத்த மலையாள திரைத்துறையையே உலுக்கியது. இதனால் மலையாள நடிகர் சங்கத்தின் நிர்வாகி பொறுப்பிலிருந்து மோகன்லால் உள்ளிட்டோர் ராஜினாமா செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications