கேரளாவுக்கு வரும் 2வது வந்தே பாரத் ரயில்.. மற்ற வந்தே பாரத் மாதிரி கிடையாது.. அப்படி என்ன ஸ்பெஷல்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்கனவே ஒரு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது காசர்கோடு - திருவனந்தபுரம் இடையே புதிய வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இதுவரை இயக்கப்பட்ட ரயில்களை விட இந்த ரயிலில் கூடுதல் வசதிகளும், சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. முழுவதும் ஏசி வசதி, அதிவேக பயணம், சொகுசான இருக்கைகள், தானியங்கி கதவு என பல்வேறு சொகுசு வசதிகள் இருப்பதால் வந்தே பாரத் ரயில் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் தற்போது வரை 25 வழித்தடங்களில் இயங்குகின்றன.

சென்னை- கோவை, சென்னை - மைசூரு இடையேயான வந்தே பாரத் ரயிலும் இயங்கும். இந்த நிலையில், தான் வரும் 24 ஆம் தேதி பிரதமர் மோடி மேலும் 9 வந்தே பாரத் ரயிலின் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். இதில் சென்னை- நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலும் அடங்கும். தென் மாவட்ட மக்களின் பெரும் எதிபார்ப்பாக இருந்த வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை 8 பெட்டிகளை கொண்டது. 8 மணி நேரம் பயணிக்கும். ஒரு டிக்கெட் சென்னை டூ திருநெல்வேலி ரூ.1620 வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏசி சொகுசு வகுப்பு 3205 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 120- 140 கிமீ வேகத்தில் இந்த ரயில் செல்லும். 660 கிலோ மீட்டர் தூரத்தை சரியாக 8 மணி நேரம் 2 நிமிடத்தில் கடக்கும்.
காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை வரும். இன்னொரு பக்கம் சென்னையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி வரும். 24 ஆம் தேதி பிரதமர் மோடி, சென்னை - விஜயவாடா இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார்.
அதேபோல், இந்தூர்- ஜெய்பூர், ஜெய்பூர் டூ உதய்பூர், பூரி- ரூர்கேலே, பாட்னா - ஹவ்ரா, ஜெய்பூர் - சண்டிகார், காசர் கோட் - திருவனந்தபுரம், ஐதரபாத் - பெங்களூர், ஜாம்நகர் - அகமதாபாத் ஆகிய வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயிலையும் தொடங்கி வைக்கிறார். இதில், கேரளாவிற்கு இரண்டாவது வந்தே பாரத் ரயிலாக காசர் கோடு - திருவனந்தபுரம் இடையேயான ரயில் இயக்கப்பட இருக்கிறது.
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரான இந்த ரயில் அண்மையில்தான் கேரளா கொண்டு செல்லப்பட்டது. கேரளவில் இயக்கப்படும் இந்த ரயில் புதிய ஆரஞ்சு நிற வடிவத்திலான வந்தே பாரத் ரயிலாகும். வழக்கமாக வெள்ளை நிறத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கபப்ட்டு வரும் நிலையில் சமீபத்தில் தான் அதன் கலரை ஆரஞ்சு நிறத்தில் மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி மாற்றப்பட்ட முதல் ரயில் கேரளாவில் இயக்கப்பட இருக்கிறது.
இந்த புதிய ஆரஞ்சு மற்றும் கிரே நிறத்திலான வந்தே பாரத் ரயிலில், இருக்கைகளிலும் கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். எக்ஸ்கியூட்டிவ் சேர் கார் பெட்டிகளில் கூடுதல் இடத்துடன் கூடிய ஃபுட் ரெஸ்ட், பெரிய அளவிலான வாஷ் பேஷன், கூடுதலாக சாயும் திறன் கொண்ட இருக்கைகள், டாய்லட்களில் கூடுதல் விளக்குகள், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் என மேலும் சில வசதிகளும் உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications