வயநாடு நிலச்சரிவு.. 5 நாள்களாக சூச்சிபாறா அருவி அருகே சிக்கிய 3 பேர்.. ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சூச்சிபாறை அருவி அருகே கடந்த 5 நாட்களாக சிக்கி தவித்து வந்த 3 இளைஞர்கள் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 5 நாட்களாக உணவு இல்லாமல், ஆபத்தான பகுதியில் சிக்கித் தவித்தது குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வயநாடு மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் பலத்த மழை கடந்த 29ம் தேதி கொட்டித் தீர்த்தது. அப்போது, நள்ளிரவு 1 மணியளவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்து செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர்.

சூரல்மலை - முண்டக்கை இடையேயான பாலம் உடைந்ததால் வெள்ளத்தைக் கடந்து ராணுவம், பேரிடர் மீட்புப் படையினரால் நிலச்சரிவு ஏற்பட்ட மலைக்கிராமங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சூரல்மலை, முண்டக்கையின் ஒரு பகுதியில் மட்டுமே மீட்புப் பணியில் ஈடுபட முடிந்தது. இதையடுத்து, ராணுவத்தினர் தற்காலிக பெய்லி பாலத்தை இரவு, பகலாக அமைத்து அவ்வழியாக மீட்பு வாகனங்களில் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்களின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. உயிருடன் இருந்த அனைவரையும் மீட்டுவிட்டோம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும், ராணுவத்தினரும் கூறியிருந்தனர். இந்நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. 5வது நாளான இன்றும் மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. தொடர்ந்து இறப்பு செய்திகளாக வந்த நிலையில், கடந்த 2 நாள்களாக அவ்வபோது ஆறுதல் அளிக்கும் தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன. அதன்படி அட்டமலா வனப்பகுதியில் சிக்கித் தவித்த பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் வனத்துறையினரால் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு சூச்சிபாறை அருவி அருகே 3 இளைஞர்கள் உயிருடன் சிக்கி தவிக்கின்றனர் என்று தகவல் கிடைத்துள்ளது. முண்டக்கையில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் இளைஞர்கள் இருப்பது கடலோர காவல்படை ரேடார் மூலம் கண்டறியப்பட்டது. உடனடியாக ஹெலிகாப்டர் உதவியுடன் ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து அவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சலி, ரியாஸ், முஸின் ஆகிய 3 பேரும் சூச்சிபாறை அருவி அருகே உள்ள பாறையில் சிக்கியது தெரியவந்தது.
இதில் இரண்டு பேருக்கு கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொருவர் ஆற்றில் நீந்தி சென்று அருகில் மற்றொரு இடத்தில் இருப்பது தெரியவந்தது. 3 இளைஞர்களும் ஆர்ப்பரித்து சென்ற சாளியாறு ஆற்றை கடந்து, ஆபத்து நிறைந்த வனப்பகுதி வழியாக பயணித்து அந்த இடத்தில் சிக்கியுள்ளனர். அவர்கள் 3 பேரும் கடந்த 5 நாட்களாக தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்துள்ளனர். இந்த பயணத்தில் ஒருநாள் இரவு முழுவதும் பாறைகளில் சிக்கி தொங்கியுள்ளனர்.
உயிரை பணயம் வைத்து அவர்களை மீட்ட ராணுவம் மற்றும் காவல்துறையினர், அவர்களுக்கு உணவு கொடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள் 3 பேரும் நாங்கள் நலமாக இருக்கிறோம். எங்கள் உயிரை காப்பாற்றிய அதிகாரிகளுக்கு நன்றி என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications