பிடிச்சிருக்கு, வச்சிருக்கேன்.. இத கிண்டல் பண்ண என்ன இருக்கு? கேரளாவில் பெண்ணுக்கு முறுக்கு மீசை
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் 35 வயது பெண் ஒருவர் மீசையுடன் வலம் வரும் காட்சிகள் சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
கண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் ஷைஜா (35). இவருக்கு ஆண்களை போல் முறுக்கு மீசை உள்ளது. இந்த புகைப்படத்தை இவர் தனது சமூகவலைதள பக்கங்களில் டிஸ்பிலே பிக்சராக வைத்துள்ளார்.
ஆண்கள் மட்டுமே மீசையுடன் இருப்பதை பார்த்து வந்த நிலையில் தற்போது பெண் ஒருவர் மீசையுடன் இருக்கும் காட்சி வியப்பளிக்கிறது. இன்னும் சிலர் அந்த பெண்ணை கிண்டலும் செய்து வருகிறார்கள்.

லேசான முடி
இதுகுறித்து ஷைஜா கூறுகையில் எனது முகத்தில் லேசான முடி காணப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் உதட்டின் மேல் பகுதியில் முடி அடர்த்தியாக இருந்தது. அப்படியே ஆண்கள் வைத்திருக்கும் மீசை போல் இருந்தது. இதை பார்த்த எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

பிடித்திருந்தது
ஆனால் எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. இதனால் நான் அந்த மீசையை ஷேவ் செய்யாமல் அப்படியே வைத்துள்ளேன். இதை பார்க்கும் பலர் என்னை கேலி கிண்டல் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதுகுறித்தெல்லாம் நான் கவலைப்படவில்லை.

மீசையால் பிரச்சினை இல்லை
இந்த மீசை இருப்பதால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இன்னும் சொல்ல போனால் மீசை இல்லாமல் இருப்பதை கனவிலும் நினைத்து பார்க்க முடியாது. கொரோனா காலத்தில் என்னால் மாஸ்க் அணிய கூட வெறுப்பாகவே இருந்தது. மாஸ்க் அணிந்தால் என் மீசை வெளியே தெரியாதே. அதனால் நான் கவலைப்பட்டேன்.

மீசை பிடித்துவிட்டது
என் வீட்டில் உள்ளவர்களுக்கு எனது மீசை பிடித்துள்ளது. குறிப்பாக எனது மகளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அப்படியிருக்கையில் நான் ஏன் மற்றவர்கள் கூறுவதை எல்லாம் கேட்க வேண்டும்? எனவே யார் என்ன வேணாலும் சொல்லட்டும், நான் இந்த மீசையை எடுக்க போவதாக இல்லை.

வாழ்க்கை
எனக்கு பிடித்திருக்கிறது நான் செய்கிறேன். எனக்கு இரு வாழ்க்கை இருந்தால் மற்றவர்களுக்காக ஒரு வாழ்க்கையை நான் வாழ்வேன். இருப்பதோ ஒரு வாழ்வு, அதை எனக்கு பிடித்தமான வகையில்தான் வாழ வேண்டும் என்றார். ஹைஜாவை பார்க்கும் பலர் ஆண்கள்தான் மீசை வைத்திருக்க வேண்டும். அதை ஏன் இந்த பெண் வைத்திருக்கிறார் என கேட்டு கிண்டல் செய்கிறார்கள்.












Click it and Unblock the Notifications