பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்து.. தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் சிதறி பலி
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள பாரதப்புழா ஆற்றின் மேல் அமைந்துள்ளது சொர்ணூர் ரயில்வே பாலம். இந்தப் பாலத்தில் தொழிலாளர்கள் பலர் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர்களும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில், ரயில்வே பாலத்தின் மீது தொழிலாளர்கள் சிலர் நடந்து சென்றுள்ளனர்.

அந்த சமயத்தில், டெல்லி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 3.05 மணியளவில் திடீரென வேகமாக வந்துள்ளது. அப்போது, ரயில் பாதையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது ரயில் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
முதல்கட்ட விசாரணையில், ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணன், ராணி, வள்ளி உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளதும், உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் பெண் ஊழியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஒருவரது உடல் மட்டும் கிடைக்கவில்லை. ஆற்றில் விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆற்றில் தற்போது நீரின் வேகம் அதிகமாக உள்ளதால் உடலைத் தேடும் பணி நாளை நடைபெறவுள்ளது. இந்த சம்பவம் நடந்தபோது, பத்து தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ரயில் வருவதை அறிந்த 6 பேர் தண்டவாளத்தில் இருந்து வெளியே ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், ரயில் பாதை பராமரிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. அண்மைக்காலமாக ரயில் விபத்து சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த விபத்துகளைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications