ஓட்டலில் மீதம் கிடந்த பரோட்டாக்கள்.. மாடுகளுக்கு கொடுத்த உரிமையாளர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி
திருவனந்தபுரம்: கேரளாவில் கொல்லம் அருகே பரோட்டாக்களை சாப்பிட்ட 5 மாடுகள் உயிரிழந்தன. சம்பவம் குறித்து அறிந்த கேரள கால்நடைத்துறை அமைச்சர் செ சிஞ்சராணி சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
கேரளா மாநிலம் கொல்லம் அருகே வட்டப்புரா பகுதியை சேர்ந்த விவசாயி ஹசபுல்லா. ஹசபுல்லா வீட்டில் மாடுகளும் வளர்த்து வருகிறார். மாட்டுப்பண்ணை வைத்து பால் வியாபாரமும் செய்து வருகிறார். வழக்கமாக மாடுகளுக்கு வைக்கோல் மற்றும் தீவணங்களை கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று ஹசபுல்லா ஓட்டலுக்கு சென்றிருந்தார். இதில், மீதம் இருந்த பரோட்டாக்களை வீட்டுக்கு கொண்டு வந்து மாட்டுக்கு கொடுத்ததாக தெரிகிறது. இதேபோல் பலாப்பழங்களையும் மாடுகள் தின்றதாக தெரிகிறது. இதனால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மாடுகள் மயங்கி விழுந்துள்ளன. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஹசபுல்லா, மாடுகளை சோதனை செய்ததில் அவை உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் மருத்துவ மையத்தின் அவசர மீட்புக்குழுவினர் வீட்டிற்கு வந்த உயிரிழந்த மாடுகளை பரிசோதித்தனர். இதில், மாடுகளுக்கு கொடுக்கப்பட்ட தீவனத்தில் பரோட்டாவும், பலாப்பழங்களும் அதிகளவில் இருந்தது தெரியவந்தது.
இதனால் தான் ஜீரணம் ஆகாமல் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 5 மாடுகளும் உயிரிழந்ததாக கால்நடை மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து உயிரிழந்த மாடுகளுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து கூறிய கால்நடை மருத்துவ குழுவினர், மாடுகளுக்கு தீங்கு விளைவிக்க கூடிய உணவுகளை கொடுக்க கூடாது என்றும், குறிப்பாக பரோட்டா, சோறு, பலாப்பழம் ஆகியவற்றை அதிகளவில் கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து அறிந்த கேரள கால்நடைத்துறை அமைச்சர் செ சிஞ்சராணி சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது எந்தெந்த உணவுகளை மாட்டுக்கு தீவணமாக வழங்க வேண்டும் என்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், மாடுகளை இழந்த விவசாயியான ஹசபுல்லாவுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications