3 நாட்களில்.. 54 பேரை கடித்த பாம்புகள்! அச்சத்தில் உறைந்து போன மக்கள்! ஷாக் சம்பவம்!
திருவனந்தபுரம்: கேரளாவில், கடந்த 3 நாட்களில் 54 பேரை பாம்புகள் கடித்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நம்மூரில் நாய்க்கடி போல, கேரளாவில் பாம்பு கடியால் மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர்.
நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக கேரளாவில், இன்னும் மழை தொடங்கவில்லை. எனவே, வெயில் காரணமாக பாம்புகள் குளிர்ச்சியான இடங்களை தேடி இடம்பெயர்ந்து வருகின்றன. இதனால், பாம்பு-மனித மோதல் அதிகரித்திருக்கிறது.

ஒரே நாளில் 14 பேர்
குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 14 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கோழிக்கோடு மாவட்டத்தில், பேராம்ப்ராவைச் சேர்ந்த அஞ்சலி மற்றும் உண்ணிக்குளம் பகுதியைச் சேர்ந்த முகமது அன்சப் ஆகிய இருவரையும் பாம்பு கடித்ததால், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுவர்கள் பாதிப்பு
திருவனந்தபுரத்தில், ஓடையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் இருவர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மலப்புரம் பகுதியில், எடப்பாள் பகுதியைச் சேர்ந்த ஷஹ்லா தஸ்னி என்ற பெண், பாம்பு கடித்ததில் நிலைமை கவலைக்கிடமாகி, தற்போது வென்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளார். இப்படி மாநிலம் முழுவதும் பாம்பு கடி சம்பவங்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கின்றன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பாம்பு கடி தவிர, பாம்புகள் தொடர்பாக சில வித்தியாசமான சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அதாவது, கூத்தாட்டுகுளம் பகுதியில் பலா மரத்திலிருந்து, பழம் விழுந்ததில், நாகப்பாம்பு தலை நசுங்கி உயிரிழந்துள்ளது.
பாம்பு கடி சம்பவங்கள் அதிகரித்திருப்பதால் கேரளா முழுவதும் அரசு மருத்துவமனைகள் அலர்ட் செய்யப்பட்டிருக்கின்றன. உரிய தடுப்பூசிகள் இருப்பில் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது. கேரளாவை பொறுத்தவரை 4 வகையான பாம்புகள்தான் மிகவும் ஆபத்தானவையாக கருதப்படுகிறது.
1. நாகப்பாம்பு
2. கண்ணாடி விரியன்
3. கட்டுவிரியன்
4. சுருட்டை விரியன்
பாம்புகளின் இடப்பெயர்வு
இந்த பாம்புகள் அனைத்தும் குளிர் ரத்த பிராணிகள். அதாவது, மனிதர்களை போல பாம்புகளால் தங்கள் உடல் வெப்ப நிலையை ஒரு குறிப்பிட்ட நிலையில் பராமரிக்க முடியாது. வெயில் 35-40 டிகிரி செல்ஸியஸை தாண்டும்போது, பாம்புகளின் உள் உறுப்புகள் செயலிழக்க தொடங்கும். எனவே, அவை குளிர்ச்சியான இடங்களை நோக்கி நகர்கின்றன.
உஷாராக இருக்க வேண்டும்
குளியலறை, கழிவறை குழாய்கள், வாஷ் பேசின் அடியில் உள்ள பகுதிகள் மற்றும் தோட்டத்தில் உள்ள நீர் குழாய்கள், விறகு அடுக்குகள், பழைய டயர்கள், சிமெண்ட் சிலாப்புகள் மற்றும் செங்கல் குவியல்கள், ஷூ ரேக்குகள், கட்டிலுக்கு அடியில் இருக்கும் இருட்டான பகுதிகள் மற்றும் ஏசி மெஷின்களின் வெளிப்புறப் பகுதி என, கிடைக்கும் இடங்களில் பதுங்கிக்கொள்கின்றன.
கேரளாவில் தற்போது பல இடங்களில் வெயில் 35 டிகிரியை கடந்து பதிவாகி வருகிறது. எனவேதான் அங்கு பாம்பு-மனித மோதல் அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications