பவர் குரூப்பெல்லாம் இல்லை! அப்படியே இருந்தாலும் சினிமாவில் தாக்கு பிடிக்காது- மம்மூட்டி போஸ்ட்
திருவனந்தபுரம்: மலையாள திரையுலகில் பாலியல் சர்ச்சை புயலாக வீசி வரும் நிலையில் கேரள முன்னணி நடிகர்கள் மோகன் லால், ஜெய சூர்யாவை தொடர்ந்து தற்போது மம்மூட்டியும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் மலையாளத்தில் வெளியிட்டிருந்த கருத்தில் கூறியிருப்பதாவது: மலையாள திரையுலகில் பாலியல் புகார்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்த ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறேன்.

அறிக்கைகளோடு நின்றுவிடாமல் அதன் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டிய நேரமிது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். திரைத் துறை பிழைத்திருக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
காவல் துறை நேர்மையாக விசாரிக்கட்டும். குற்றவாளிகளை நீதிமன்றங்கள் தண்டிக்கட்டும். சினிமாவில் பவர் குரூப் ஒன்று இல்லை. அப்படியே இருந்தாலும் அதெல்லாம் எந்த வகையிலும் தாக்கு பிடிக்காது. சினிமா என்பது இந்த சமூகத்தில்தான் உள்ளது.
சினிமாவில் ஏற்படும் பிரச்சினைகள் சிறியதாக இருந்தாலும் சரி பெரியதாக இருந்தாலும் சரி, மக்களின் பார்வை முழுக்க சினிமாவின் மீது இருப்பதால் அவை முக்கிய தாக்கத்தை ஏற்படுகின்றன. சினிமா துறையில் ஒவ்வொருவரும் ஒற்றுமையாக எந்த பிரிவினையும் இல்லாமல், ஹேமா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு மம்மூட்டி கூறியுள்ளார்.
கேரளம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரையுலகில் புயலை கிளப்பி வரும் ஹேமா கமிட்டி அறிக்கை கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியானது. அந்த அறிக்கை வெளியான சூட்டோடு சில நடிகைகள் ரியாஸ் கான், ஜெயசூர்யா, இடவள பாபு, சித்திக், இயக்குநர் ரஞ்சித், அபு உள்ளிட்டோர் மீது பாலியல் புகார்களை கூறி வருகிறார்கள்.
இதற்கு முன்னணி நடிகர்களோ சம்பந்தப்பட்டவர்களோ எந்த பதிலையும் தராமல் இருந்தனர். இந்த நிலையில் மலையாள நடிகர் சங்க தலைவர் (அம்மா) பதவியிலிருந்து ராஜினாமா செய்த மோகன் லால், 10 நாட்கள் கழித்து நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து மலையாள திரையுலகில் பாலியல் புகார்கள் குறித்து விளக்கமளித்திருந்தார். அது போல் ஜெயசூர்யாவும், "என் மீதான பாலியல் புகாரை நான் சட்டபடி தீர்ப்பேன்" என தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இத்தனை நாட்களாக அமைதியாக இருந்த மம்மூட்டி தற்போது மவுனத்தை கலைத்துள்ளார். மலையாள சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக நடிகைகளின் பாலியல் குற்றச்சாட்டு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அதிலும் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு பல நடிகைகள், முன்வந்து புகார் அளித்து வருகிறார்கள்.
ஹேமா கமிட்டி அறிக்கையில் கூறப்பட்ட அம்சங்கள் என்னவென்றால் மலையாள திரையுலகம் 15 பேர் கொண்ட மாபியாக்களின் பிடியில் சிக்கியிருப்பதாக நடிகைகள் குற்றம்சாட்டுகிறார்கள். நடிகைகளை அரைக்குறை ஆடைகளில் தேவையின்றி நடிக்க வற்புறுத்துகிறார்கள்.
அது போல் ஒரு நடிகர், தன்னை கட்டிப் பிடிக்கும் காட்சியில் நடிப்பதற்கு 17 முறை ரீடேக்குகள் வாங்கியதாகவும் நடிகை குற்றம்சாட்டியிருந்தார். அது போல் சம ஊதியம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என நடிகைகள் குற்றம்சாட்டினர்.
உடை மாற்ற வேண்டும் என்றாலும் கூட எங்காவது மரத்தின் பின்புறம் நின்று மாற்றும் அவலம் இருப்பதாகவும், மாதவிடாய் சமயத்தில் நாப்கின் மாற்ற கூட முடியாமல் தவிப்பதாகவும் நடிகைகள் புகாரில் தெரிவித்திருந்தனர். அது போல் கழிப்பறை இல்லாததால் நடிகைகள் ஷூட்டிங்கில் தண்ணீர் குடிப்பதே இல்லை என்றும் புகார் எழுந்துள்ளது. மேலும் சம ஊதியம், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு ஹேமா கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.












Click it and Unblock the Notifications