நடிகை பலாத்கார வழக்கு: காவ்யா மாதவனின் வங்கி லாக்கர் சோதனை.. முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
திருவனந்தபுரம்: பிரபல நடிகை பலாத்கார வழக்கில் திலிப்பின் 2ஆவது மனைவி காவ்யா மாதவனுக்கு தொடர்பிருப்பதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து அவருடைய வங்கி லாக்கரில் சோதனை மேற்கொண்ட போலீஸார் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல நடிகையை காரில் கடத்தி அத்துமீறலில் ஈடுபட்டதாக மலையாள நடிகர் திலிப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் திலிப் கைதாகி ஜாமீனில் வெளியே உள்ளார். அவர் சாட்சியங்களை மிரட்டியதாக புகார் எழுந்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணை
இந்த நிலையில் வழக்கு விசாரணையின் போது மலையாள திரைப்பட இயக்குநர் பாலசந்திர குமார் பகிரங்கமாக ஒரு சில தகவல்களை வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து நடிகை பாலியல் அத்துமீறலில ஈடுபட்டவுடன் அதை வீடியோவாக எடுக்கப்பட்டு திலீப் தனக்கு மொபைல் மூலம் அனுப்பியதாகவும் அதை தான் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உறவினர்கள்
இந்த நிலையில் இந்த வழக்கில் விசாரணை நடத்திய காவல் துறை அதிகாரிகளை பழிவாங்கவும் திலீப்பும் அவரது உறவினர்களும் திட்டமிட்டு இருந்ததாகவும் தெரிவித்தார். நடிகை கடத்தப்பட்ட வழக்கை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரிகளை மிரட்டியதாக கேரள காவல்துறையினர் மலையாள நடிகர் திலீப் மீது வழக்கு பதிவு செய்தனர்.

காவ்யா மாதவன்
இந்த விவகாரத்தில் திலிப்பின் 2ஆவது மனைவி காவயா மாதவனுக்கு தொடர்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அவரிடம் கடந்த இரு நாட்களுக்கு முன்பு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் போலீஸாரின் பல கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

வங்கி லாக்கரில் சோதனை
நேற்று நடிகை காவ்யா மாதவனின் வங்கி லாக்கரில் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். காலை முதல் மாலை வரை இந்த சோதனை நடந்தது. இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக நடிகை காவ்யா மாதவனிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications