Lakshmi Menon: "ஐடி ஊழியர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்!" லட்சுமி மேனன் பரபரப்பு குற்றச்சாட்டு
கொச்சி: ஐடி ஊழியர் அலியார் ஷா சலீம் என்பவர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக நடிகை லட்சுமி மேனன் குற்றம்சாட்டியுள்ளார். அலியார் ஷா சலீம் கடத்தப்பட்ட வழக்கில், நடிகையை, செப்டம்பர் 7ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள திருப்போனித்துரா பகுதியைச் சேர்ந்தவர் பிரபல நடிகை லட்சுமி மேனன். இவர் மலையாளப் படங்கள் மட்டுமின்றி 'கும்கி', 'சுந்தரபாண்டியன்' உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுக்காகவும் அவர் விருதுகள் பெற்றுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு, லட்சுமி மேனன் தனது தோழி உட்பட மூன்று பேருடன் கொச்சி பானர்ஜி சாலையில் உள்ள மதுபான பாருக்குச் சென்றுள்ளார். அங்கு மது அருந்த வந்த ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அலியார் ஷா சலீம் என்பவருக்கும், லட்சுமி மேனன் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருதரப்பினரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பாரில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இருவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
பார்ரிலிருந்து வெளியே வந்த பிறகும் அவர்களுக்கிடையே தகராறு நீடித்தது. அதன் பிறகு, அலியார் ஷா சலீம் தனது காரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, லட்சுமி மேனன் உள்ளிட்ட நான்கு பேரும் மற்றொரு காரில் அவரை பின்தொடர்ந்து சென்று நடுரோட்டில் வழிமறித்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஐடி ஊழியரை காரிலிருந்து வெளியே இழுத்து, தங்கள் காரில் கடத்திச் சென்று கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் ஓரிடத்தில் அவரை இறக்கிவிட்டுச் சென்றனர்.
இது குறித்து எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் அலியார் ஷா சலீம் புகார் அளித்தார். தனது புகாரில், லட்சுமி மேனன் உள்ளிட்ட நான்கு பேர் தன்னை காரில் கடத்திச் சென்று தாக்கியதாகக் கூறியிருந்தார். இதையடுத்து, காவல்துறை விசாரணையைத் தொடங்கியதோடு, மதுபான பார் மற்றும் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், நடிகை லட்சுமி மேனனின் நண்பர்கள், ஐடி ஊழியரை தாக்கியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அனீஸ், மிதுன், சோனாமோல் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது ஆட்கடத்தல், தாக்குதல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, லட்சுமி மேனன் மற்றும் ஐடி ஊழியர் இடையேயான தகராறு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த வீடியோவில் லட்சுமி மேனன் இருப்பது தெளிவாகத் தெரிந்ததால், காவல்துறையினர் அவரிடமும் விசாரணை நடத்தத் தேடினர். அப்போது, அவர் வீட்டில் இல்லை எனவும், அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், லட்சுமி மேனன் தலைமறைவானதாகக் கருதப்பட்டது. பின்னர், அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தபோது, அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவந்தது. அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: "அந்த ஐடி ஊழியர் பாரில் என்னை ஆபாச வார்த்தைகளால் திட்டி, பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். நான் பாரை விட்டு வெளியே வந்த பின்பும், அந்த நபர் காரில் பின்தொடர்ந்து வந்து பீர் பாட்டிலால் தாக்கினார். ஐடி ஊழியர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார் ஜோடிக்கப்பட்டது. எனக்கும் இந்த குற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை," எனத் தெரிவித்துள்ளார். ஓணம் பண்டிகை விடுமுறைக்குப் பிறகு இந்த மனு பரிசீலனைக்கு வர வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications