அருமை.. வயநாடு களத்தில் இறங்கி உதவும் "போர் தொழில்" புகழ் நடிகை நிகிலா விமல்!
வயநாடு: கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்களை அனுப்பிவைக்கும் பணியில் போர் தொழில், குருவாயூர் அம்பல நடையில் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்ற, நடிகை நிகிலா விமல் ஈடுபட்டு வருகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் அடுத்தடுத்து 3 அதிபயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வயநாடு, சூரல்மலை, முண்டக்கை, மலப்புரம் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 150 ஐ கடந்துள்ளது. காட்டாற்று வெள்ளம் அடித்துச் செல்லப்பட்டதில் 400க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக மீட்புப் பணிகள் அதிதீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில ஊர்கள் இருந்ததற்கான தடயமே இல்லாமல் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களும் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால் அப்பகுதி முழுவதும் மரண ஓலமே கேட்கிறது. தங்களது வீடு, உடமைகளை இழந்து பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முண்டக்கை, மேம்பாடி பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் 163 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 200க்கும் மேற்பட்டோர் மண்ணுக்கு அடியில் சிக்கியிருப்பதால் ராணுவம், விமானப் படை, கடற்படை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்பு வீரர்கள், காவலர்கள் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். முண்டக்கை, மேம்பாடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்து அதற்கான வங்கிக் கணக்கு எண்ணையும் அறிவித்துள்ளது. பல்வேறு கட்சியினர் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, உடை, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கண்ணூர் தளிபரம்பாவைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகை நிகிலா விமல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தால் துவங்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருள்கள் வழங்கும் மையத்தில் தன்னார்வலராகப் பணியாற்றி வருகிறார். பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் சேகரிக்கப்பட்ட பொருள்களை பிரித்து அனுப்பும் பணியில் அவர் நேற்று இரவு வெகுநேரம் பணியாற்றியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோவை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தங்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நடிகை நிகிலா விமல் தமிழ் படங்களான தம்பி, வெற்றிவேல், கிடாரி, தம்பி, ரங்கா, போர்தொழில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் அண்மையில் வெளியாகிய குருவாயூர் அம்பலநடையில் என்ற படத்தில் நடித்து மிகுந்த வரவேற்பைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications