டார்கெட் கேரளா.. பாஜக கையில் எடுத்த பீகார் பார்முலா
திருவனந்தபுரம்: பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த முடிவு பாஜகவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் வருகிற டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. பீகாரில் சிறுபான்மை சமுதாய மக்கள் வாக்கு கிடைத்திருப்பதால், பாஜக புதிய திட்டங்களுடன் களமிறங்கவுள்ளது.
பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. அங்கு கடந்த 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. ஆட்சி அமைப்பதற்கு 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தேர்தல் முடிவில் நிதிஷ்குமாரின் ஜேடியூ, பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி 201 தொகுதிகளில் வெற்றி பெற்றது. லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி
35 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் மூலம் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது.

பீகார் மாநிலத்தில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணியில், 66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனால் மொத்தமுள்ள 8 கோடி வாக்காளர்களில், 7.43 கோடி வாக்காளர்கள் மட்டுமே பட்டியலில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. வாக்காளர் பட்டியலில் மோசடி செய்துதான் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக காங்கிரஸ் புகார் கூறி வருகிறது. அதேபோல தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பீகார் வெற்றி பாஜகவுக்கு பயங்கர தெம்பை கொடுத்துள்ளது. எதிர்வரும் 2026 தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் சட்டமன்ற தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள திட்டமிட்டு வருகிறார்கள். பீகார் முடிவுகள் நம்பிக்கையில், விரைவில் நடைபெறவுள்ள கேரளா உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெரும் நம்பிக்கையுடன் இறங்கியுள்ளனர்.
கேரளா மாநிலத்தில் வருகிற டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. கோவா முன்னாள் ஆளுநரும், கேரளா பாஜக நிர்வாகியுமான ஸ்ரீதரன் பிள்ளை கூறுகையில், "பீகார் வெற்றி பாஜகவின் கேரளா பார்வையை மாற்றியுள்ளது. முக்கியமாக சிறுபான்மை மக்கள் விஷயத்தில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் சிறுபான்மை மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். கேரளா சிறுபான்மை மக்களுக்கு பாஜக மீது தவறான பிம்பம் உள்ளது. அது தற்போது மாறுவதற்கு வாய்ப்புள்ளது.
பிரதமர் மோடி சாதாரண தலைவர் இல்லை. அவர் மகத்தான தலைவர். அவரை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை என்பதை ராகுல் உணர்ந்திருப்பார்." என்றார். பாஜக கேரளா மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர், "இப்போது பீகார்.. நாளை கேரளா. பீகார் காங்கிரஸ்க்கு என்ன நடந்ததோ, அதுதான் கேரளா காங்கிரஸ்க்கும் நடைபெறும்." என்றார்.












Click it and Unblock the Notifications