கேரளாவை மிரட்டும் மூளையை தின்னும் அமீபா.. 5 நாட்களில் 4 பேர் பலி
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில மாதங்களாக மூளையை தின்னும் அமீபா நோய் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் 4 பேர் அந்த நோயால் உயிரிழந்தனர். மேலும் சிலர் மூளையை தின்னும் அமீபா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடவுளின் தேசமான கேரளாவில் இயற்கை சீற்றங்களுக்கும், நோய் பரவலுக்கும் எப்போதும் பஞ்சம் இருக்காது. பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல் தொடங்கி நிபா வைரஸ், கொரோனா வைரஸ் ஆகியவற்றால் அதிகளவு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த வரிசையில் சமீப காலமாக அங்கு மூளையை தின்னும் அமீபா நோய் வேகமாக பரவி மக்களிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

தற்போதுவரை கேரளா மாநிலத்தில் மூளையை தின்னும் அமீபா நோயால் சுமார் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 37 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கேரளா மாநில சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். முக்கியமாக கடந்த 5 நாட்களில் மட்டும் 4 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது அம்மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் மூளையை தின்னும் அமீபா நோய் உறுதி செய்யப்பட்டது. இதற்காக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கேரளா மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், "மாநிலத்தில் மூளையை தின்னும் நோய் பரவிக் கொண்டிருக்கிறது. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அந்த அமீபா மூக்கு வழியாக நுழைந்து உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. மக்கள் மாசுபட்ட நீர் நிலைகள் மற்றும் குளோரின் கலக்கப்பட்டாத நீர் நிலைகளில் குளிக்கும்போது இந்த அமீபா தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
அப்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முடிந்தவரை அதுபோன்ற நீர் நிலைகளில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் முகம் கழுவுதல், வாய், மூக்கு தொடைப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிடும் அறிவிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்." என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications