ஆண்களுடன்.. முஸ்லிம் பெண் கை குலுக்குவது தவறா? அரசமைப்பே உச்சபட்சமானது.. ஹைகோர்ட் நீதிபதி போட்ட போடு
திருவனந்தபுரம்: இஸ்லாமிய பெண்கள், வெளிநபருடன் கை குலுக்குவதால், இஸ்லாமிய மரபுகளை அவர்கள் மீறிவிட்டதாக எடுத்துக் கொள்ள முடியுமா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறது நீதிமன்றம்.. எந்தமதவொரு மத நம்பிக்கையும், அரசமைப்பைவிட மேலானதல்ல, இந்திய அரசமைப்பே உச்சபட்சமானது என்றும் நீதிமன்றம் காட்டமாக கூறியிருக்கிறது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கரந்தூர் மார்காஸ் சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது.. இங்கு பயிலும் இஸ்லாமிய மாணவி ஒருவர், தன்னுடைய கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், அப்போதைய நிதியமைச்சர் தாமஸ் ஐஸாக்குடன் கலந்துரையாடியிருக்கிறார.

வாழ்த்து பாராட்டு: இதையடுத்து, அந்த மாணவிக்கு அமைச்சரும் பரிசு வழங்கி பாராட்டியிருக்கிறார்.. அப்போது அமைச்சருடன் கை குலுக்கி, அவரது வாழ்த்தையும் மாணவி பெற்றுக்கொண்டார்,
அமைச்சருடன் மாணவி கை குலுக்கிய சம்பவம், சர்ச்சையாக வெடிக்க துவங்கியது.. "ஒரு இஸ்லாமிய மாணவி, வெளிநபர் ஒருவருடன் கை குலுக்கலாமா? வெளிநபரை தொட்டு பேசிவிட்டார் அந்த மாணவி.. இதன்மூலம் இஸ்லாமிய மதத்தினர் கடைபிடிக்கும் மரபுகளை அந்த மாணவி மீறிவிட்டார்" என்று சோஷியல் மீடியாவில் அந்த மாணவிக்கு எதிரான கண்டனங்கள் எழுந்தன.. பல்வேறு அவதூறு கருத்துக்களும் பதிவாகின.
மன உளைச்சல்: இதனால் மாணவியும், அவரது குடும்பத்தினரும் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார்கள்.. இதையடுத்து, மாணவி மீது குற்றச்சாட்டுகளை கூறி, வீடியோ வெளியிட்ட நபர் மீது மாணவியின் தரப்பில், கீழமை கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது..
இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பெண் தரப்பினர் தன் மீது சுமத்தியுள்ள மேற்கண்ட புகார்களை "சட்டப்படி குற்றமாகக் கருத இயலாது" என்று , அந்த நபர் கேரள ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தார்.
இந்த மனுவை ஹைகோர்ட் நீதிபதி பி.வி. குன்னிகிருஷ்ணன் நேற்று விசாரித்தார்.. இறுதியில் தன்னுடைய உத்தரவில் நீதிபதி சொன்னபோது, "வெளிநபரை தொட்டுப் பேசியதன் மூலம் இஸ்லாமிய மரபுகளை அந்த பெண் மீறிவிட்டதாக எடுத்துக்கொள்ள முடியுமா? இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னுடைய சுய மத நம்பிக்கை மீதான சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாக துணிச்சலுடன் புகார் தந்திருக்கிறார்.
நீதிபதி அதிரடி: இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணின் உரிமையை அரசமைப்பு பாதுகாக்கும்... எந்தவொரு மத நம்பிக்கையும், அரசமைப்பைவிட மேலானது கிடையாது.. இந்திய அரசமைப்பே உச்சபட்சமானது" என்று கூறிய நீதிபதி, இந்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர் இந்த விவகாரத்தை கீழமை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றத்துக்கும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications