புல்வாமா தாக்குதலில் பலியான வீரர் சடலத்துடன் செல்பி? சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்
திருவனந்தபுரம்: புல்வாமா தாக்குதலில் இறந்த கேரள வீரர் ஒருவரின் சடலத்துடன் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் செல்பி எடுத்ததாக சர்ச்சை வெடித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். நாடுமுழுவதும் இந்த பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் இறந்த கேரள வீரர் ஒருவரின் சடலத்துடன் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் செல்பி எடுத்ததாக சர்ச்சை வெடித்துள்ளது.
புல்வாமா தாக்குதலில் கேரள மாநிலம் வயநாடை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் வசந்த குமார் மரணமடைந்தார். அவருடைய சொந்த ஊரான திருக்கைபேட்டாவில் உடல் தேசியக்கொடி போர்த்தப்பட்டு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
அவர்களோடு மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானமும் இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதில் அவர் சடலத்துடன் செல்பி எடுத்துள்ளார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடுமையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், நான் செல்பி எடுக்கவில்லை என்று அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் மறுப்பு தெரிவித்துள்ளார்.