Kerala: உள்ளாட்சி தேர்தல் ரிசல்ட்: கேரளாவில் பல்வேறு இடங்களில் கட்சியினர் இடையே மோதல்! பலர் காயம்
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து ரிசல்ட் வெளியிடப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. கோழிக்கோட்டில் எரமலாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்குள் ஆயுதங்களுடன் வந்த மார்க்சிஸ்ட் கட்சியினர், சூறையாடினர். மேலும் அங்குள்ள முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிலையும் சேதப்படுத்தப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
கேரளாவில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 6 மாநகராட்சிகள், 14 மாவட்ட பஞ்சாயத்துகள், 86 நகராட்சிகள், 152 ஊராட்சி ஒன்றியங்கள் என மொத்தம் 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 13 ஆம் தேதி எண்ணப்பட்டன.

திருவனந்தபுரத்தை கைப்பற்றிய பாஜக
இதில் ஆளும் இடதுசாரி முன்னணி கூட்டணியை விட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி பல இடங்களில் வெற்றி பெற்றது. கொல்லம், கொச்சி, திருச்சூர் மற்றும் கண்ணூர் ஆகிய 4 மாநகராட்சிகளை கைப்பற்றியது. திருவனந்தபுரம் மட்டும் பாஜக வசம் சென்றது. 45 ஆண்டு கால கேரள வரலாற்றில் முதல் முறையாக திருவனந்தபுரத்தை பாஜக கைப்பற்றியது.
அதேபோல, 54 நகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி கோழிக்கோடு மாநகராட்சியை பிடித்துள்ளது. தேர்தல் முடிவு வெளியான நிலையில், கேரளாவில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. கோழிக்கோட்டில் எரமலா என்ற பகுதியில் காங்கிரஸ் அலுவலகம் உள்ளது.
பேரணியில் கல் வீச்சு
இந்த அலுவலகத்திற்குள் ஆயுதங்களுடன் வந்த மார்க்சிஸ்ட் கட்சியினர், சூறையாடினர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிலையும் சேதப்படுத்தப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். மராடு பகுதியில் காங்கிரஸ் நடத்திய வெற்றி பேரணியில் கல் வீச்சு நடத்தப்பட்டது. இதில் சிலர் காயம் அடைந்தனர்.
இதற்கிடையே, திருவனந்தபுரத்தில் மேயராக பாஜக யாரை தேர்வு செய்ய இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. புதிய மேயராக வி.வி.ராஜேஷ், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஸ்ரீலேகா ஆகியோரது பெயர் அடிபடுகிறது. திருவனந்தபுரம் மாவட்ட முன்னாள் பாஜக தலைவராக இருந்தவர் வி.வி.ராஜேஷ். இவர் இந்த தேர்தலில் கொடுங்கனூர் வார்டில் நின்று வெற்றி பெற்றுள்ளார்.
சிறுபான்மையினருக்கு வாய்ப்பு
முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரியான ஆர்.ஸ்ரீலேகா சாஸ்தாமங்கலம் வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். துணை மேயர், பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மேயராக ஸ்ரீலேகா தேர்ந்தெடுக்கப்பட்டால் மேயர், துணை மேயர் என்ற இருபதவியையும் பெண்களே வகிக்கும் நிலை ஏற்படும்.
பாஜக மீது பொதுவாக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற குற்றச்சாட்டு எழுப்பப்படுவது உண்டு. அதனை உடைக்க கேரள மாநில பாஜக தலைவர்கள் முயன்றனர். கிறிஸ்தவ ஆயர்கள், பாதிரியார்களை சந்தித்து குறைகளை கேட்பதில் அக்கறை காட்டினர். எனவே சிறுபான்மையினர் யாரையாவது தேர்வு செய்யலாம் என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications