மாட்டு சாணத்தில் குளிப்பவர்கள்தான்.. இந்தியர்கள் என்ற கண்ணோட்டம் ஏற்படலாம்.. சசி தரூர் ட்வீட்
திருவனந்தபுரம்: இந்தியா என்பது கோமியம் குடிப்பவர்கள், மாட்டுச் சாணத்தில் குளிப்பவர்களைக் கொண்ட நாடு என்று உலகின் கண்ணோட்டம் தற்போது மாறிவிட்டதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் விமர்சித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ஆம் அலையின் தாக்கம் இன்னும் தொடர்கிறது. தினசரி கொரோனா பாதிப்பு இன்னும் மூன்று லட்சத்தைக் கடந்தே பதிவாகி வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பரவல் வேகம் சற்று குறைந்துள்ளது.

பசு சாண குளியல்
இந்நிலையில், நாட்டிலுள்ள சில மாநிலங்களில் கோமியத்தைக் குடிப்பது, பசு சாண குளியல் மூலம் கொரோனா பாதிப்பைத் தடுக்கலாம் எனக் கருதுகின்றனர். இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் கோசாலைகளுக்குச் சென்று பசு சாணத்தை உடலில் பூசிக் கொண்டு குளிக்கின்றனர். இருப்பினும், இதற்கு எவ்வித அறிவியல்பூர்வமான ஆதாரங்களும் இல்லை என இந்திய மருத்துவ சங்கம் விளக்கமளித்துள்ளது.

இந்தியாவின் பிம்பம்
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர் தனது ட்விட்டரில், "நமது(இந்தியாவின்) பிம்பம் குறித்து பாஜக மிகவும் கவலை கொண்டுள்ளதால் சொல்கிறேன். பல தலைமுறைகளாக இந்தியாவைப் பாம்பு பிடிப்பவர்களும் மந்திரவாதிகளும் இருக்கும் நாடாகவே உலகம் பார்த்தது. கடந்த 25 ஆண்டுகளில் மருத்துவர்கள் மற்றும் கணினி வல்லுநர்களின் வீடாக இந்தியா மாறியது.

கோமியம் குடிப்பவர்கள்
ஆனால் இப்போது இந்தியர்கள் என்றாலே கோமியம் குடிப்பவர்கள், மாட்டுச் சாணத்தில் குளிப்பவர்கள் என்ற கண்ணோட்டம் ஏற்படுகிறது. இதுதான் வளர்ச்சியா" என்று பதிவிட்டுள்ளார். இவரது ட்வீட் உடனடியாக வைரலானது. பசு சாணம் மற்றும் கோமியத்தில் சில பாக்டீரியாக்கள் இருப்பதால் வேறு சில பாதிப்புகளும் ஏற்படலாம் என வல்லுநர்களும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாஜக விமர்சனம்
பாஜக தலைவர்கள் சசி தரூரின் இந்த ட்வீட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜக மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வினய் சஹஸ்ரபுத்தே, "இந்தியாவின் கலாசாரம், மரபுகள் மற்றும் பாரம்பரியத்தைக் கேலி செய்வதே சசி தரூரின் வழக்கமான நடவடிக்கையாக மாறிவிட்டது. அவர் இத்துடன் இதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications