பெண் எம்எல்ஏவை கட்டியணைக்கபோன காங்கிரஸ் தலைவர்.. அதுவும் தலைமை அலுவலகத்திலேயே! ஷாக் வீடியோ
திருவனந்தபுரம்: கேரளா திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு கொல்லம் எம்எல்ஏ பிந்து சென்றார். அப்போது அங்கு நின்றவர்களிடம் அவர் வணக்கம் மற்றும் கைக்குலுக்கியபடி சென்றார். அப்போது காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், அவரை கட்டியணைக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தை போல் கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. கேரளாவில் ஒரே கட்டமாக கடந்த 9ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. கேரளாவை எடுத்து கொண்டால் மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதனால் மெஜாரிட்டிக்கு 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இதில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 22, கேரளா காங்கிரஸ் 7, ஐஎன்டி கட்சி, ஆர்எஸ்பி கட்சிகள் தலா 3, சிஎம்பி, கேடிபி, கேசி (ஜே), ஆர்எம்பிஐ கட்சிகள் தலா ஒரு தொகுதிகளிள் என்று மொத்தம் 102 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி மொத்தம் 35 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 26 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 8 தொகுதிகளிலும், ஆர்ஜேடி கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில் இந்த முறை 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தற்போது கேரளாவில் புதிய முதல்வரை தேர்வு செய்யும் பணியில் மேலிடம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே தான் திருவனந்தரத்தில் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடனான கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 71 வயது நிரம்பிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செரின் பிலிப் என்பவர் வளாகத்தில் நின்றார்.
அப்போது கொல்லம் எம்எல்ஏ பிந்து கிருஷ்ணா நடந்து வந்தார். அவர் அங்கிருந்தவர்களுக்கு கைகளை கூப்பியும், கை கொடுத்தும் வணக்கம் செலுத்தினார். அப்போது பிந்துவை நோக்கி காங்கிரஸ் நிர்வாகி செரின் பிலிப் சென்றார். அவரை பார்த்ததும் பிந்து கை கொடுக்க முயன்றார். ஆனால் அதனை விரும்பாத செரின் பிலிப் அவரை கட்டியணைக்க முயன்றார். இதனால் தர்மசங்கடத்துக்கு ஆளான பிந்து எம்எல்ஏ உடனடியாக அவரை தவிர்த்துவிடடு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் காங்கிரஸ் நிர்வாகி செரின் பிலிப்பை திட்டி தீர்த்து வருகின்றனர். பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற நாகரீகம் கூட தெரியவில்லை என்று திட்டி தீர்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications