கேரளாவில் JN1 வகை கொரோனா பாதிப்பு- அச்சம் வேண்டாம் என அறிவுறுத்தல்- ஐயப்ப பக்தர்களுக்கு சோதனை?
திருவனந்தபுரம்: கேரளாவில் பெண் ஒருவருக்கு JN1 வகை கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இருந்த போதும் இந்த வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டாலே போதும்; அச்சப்பட தேவை இல்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலக நாடுகளை 2019-ம் ஆண்டு முதல் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இதனால் உலக நாடுகள் லாக்டவுன் உள்ளிட்டவைகளை அமல்படுத்த நேரிட்டது. கொரோனா தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது. ஆனாலும் கொரோனா வைரஸ் பல்வேறு திரிபுகளைக் கொண்டு அவ்வப்போது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

உலக நாடுகளில் தற்போது JN1 வகை கோரொனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது கேரளா மாநிலத்தில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1492. இதில் 90% கேரளாவில் பதிவானவைதான்.
இதனிடையே கேரளாவில் பெண் ஒருவருக்கு JN1 வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவுடன் சேர்த்து மொத்தம் 40 நாடுகளில் இந்த வகை கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. JN1 வகை கொரோனா வைரஸ் தாக்கினால் காய்ச்சல், இருமல், உடல் வலி மற்றும் வயிற்று போக்கும் இருக்கும்; இது உயிரிழப்பை ஏற்படுத்தாது; ஆகையால் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்தாலே போதும் என்கின்றனர் சுகாதாரத்துறை வல்லுநர்கள்.
இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சபரிமலை செல்லும் அல்லது சென்று திரும்பும் ஐயப்ப பக்தர்களுக்கு பரிசோதனைகள் நடத்தும் அளவுக்கு பதற்றமான சூழ்நிலை எதுவும் இல்லை என்றார்.
மேலும் தற்போதைய புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தினால் 3 நாட்களில் சரியாகிவிடுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு உரிய சிகிச்சைகள் எடுத்தாலே போதுமானது என்பது மருத்துவர்கள் அறிவுறுத்தல் என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.












Click it and Unblock the Notifications