5 ஆண்டுகளாக சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! கேரளாவை உலுக்கிய பலாத்கார சம்பவத்தில் அதிரடி.. 44 பேர் கைது
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் பத்தனம் திட்டாவில் சிறுமி ஒருவர் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 44 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை சிறப்பு புலனாய்வு குழு தேடி வருகிறது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள ஒரு பள்ளியில் 18 வயது மாணவி 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தடகள வீராங்கனையான அவரை கடந்த 5 ஆண்டுகளாக 60-க்கும் மேற்பட்டோர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இளம்பெண் வீட்டிற்கு மகிளா சமக்யா எனும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஃபீல்ட் விசிட் சென்ற போதுதான் நெஞ்சை உலுக்கும் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. குழந்தைகள் நல கமிட்டியில் உள்ளவர்கள் இளம்பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுத்தனர். இந்த கவுன்சிலிங்கின்போது இளம்பெண் திடுக்கிட வைக்கும் தகவலை வெளியிட்டார்.
அதாவது தலித் சமுதாயத்தை சேர்ந்த அந்த பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக 64 பேர் மிரட்டி பாலியல் தொல்லை தந்துள்ளதாக அழுதபடி கூறினார். தனக்கு 13 வயது நிரம்பியதில் இருந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆபாசபடங்களை காட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கண்ணீருடன் தெரிவித்தார். இந்த பட்டியல் அடுத்தும் தொடர்ந்தது. மாணவியின் தந்தையின் நண்பர்கள், மாணவர்கள், விளையாட்டு ஆசிரியர் என பலரும் அடுத்தடுத்து மாணவியிடம் அத்துமீறி இருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு விளையாட்டிலும், படிப்பிலும் கவனக்குறைவு ஏற்பட்டது. மேலும் அவரும் சோர்வாக இருந்தார். இதுபற்றி சக ஆசிரியர்கள் கவுன்சிலிங் கொடுத்த போது, 5 ஆண்டுகளாக மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நலக்குழு சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கேரள போலீசாரின் சிறப்பு புலனாய்வு குழு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் இதுவரை 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வழக்கை கண்காணித்து வரும் டிஐஜி அஜீதா பேகம் கூறியதாவது:- இந்த வழக்கு தொடர்பாக 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 59 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 44 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 2 பேர் தலைமறைவு ஆகியுள்ளனர். அவர்கள் வெளிநாட்டில் உள்ளார்கள்.
லுக் அவுட் நோட்டீஸ் மற்றும் இண்டர்போல் உதவியுடன் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிப்பது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம். இவர்கள் தவிர மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தலைமறைவு ஆகியுள்ளவர்களின் வீடுகளில் சோதனை மெற்கோண்டுள்ளோம். விரைவில் கைது செய்யப்படுவார்கள். அறிவியல் ரீதியிலான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. இதில் சமரசம் என்ற பேச்சுகே இடம் இல்லை. அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம். பத்தினம்திட்டாவில் உள்ள தனியார் பஸ் நிலையத்தில் தான் பாதிக்கப்பட்ட சிறுமியை குற்றம் சாட்டப்பட்டவர்கள் சந்தித்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களுக்கு சிறுமி அழைத்து செல்லப்பட்டு இருக்கிறாள்" என்றார்.












Click it and Unblock the Notifications