கேரளாவில் பதற வைக்கும் கோழிக்கோடு விமான விபத்து.. பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஏற்பட்ட விமான விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
துபாயிலிருந்து கோழிக்கோட்டிற்கு 174 பயணிகள், 6 விமான படை ஊழியர்கள் என மொத்தம் 190 பேருடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கனமழை காரணமாக தரையிறங்க முடியாமல் தவித்தது.

ரன்வேயில் தண்ணீர் தேங்கியிருந்தது. இதனால் தரையிறங்கும் முயற்சி முதலில் தோல்வி அடைந்தது. பின்னர் சிறிது நேரம் பறந்தபடியே இருந்த விமானம் இரண்டாவது முறையாக தரையிறங்க முயற்சித்தது.
அப்போது வழுக்கி விழுந்த விமானம் ரன்வேயை தாண்டி 35 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது. விமானத்திலிருந்து நெருப்பும் புகையும் வந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த விபத்தில் விமானி கேப்டன் தீபக் சாத்தே, துணை விமானி அகிலேஷ் ஆகியோர் பலியாகிவிட்டனர்.

இந்த விபத்தில் மொத்தம் 19 பேர் பலியாகிவிட்டனர். அதில் 9 பேர் அடையாளம் காணப்பட்டனர். மலப்புரத்தைச் சேர்ந்த ஷாஹீர் சயிது (36), பாலக்காட்டை சேர்ந்த முகமது ரியாஸ் (35), மலப்புரத்தைச் சேர்ந்த லைலாபி (51), கோழிக்கோட்டை சேர்ந்த ஜானகி (54), கோழிக்கோடு மாவட்டம் பிலச்சேரியைச் சேர்ந்த அயானா ரவிசங்கர் (4), சரஃபுதீன், மலப்புரத்தைச் சேர்ந்த ராஜீவன், வெல்லமடுகுன்னு பகுதியைச் சேர்ந்த 10 மாத குழந்தையான அப்சல் முகமது, 45 வயது பெண் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அனுமதிக்கப்பட்டவர்கள் மோசமான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை கோழிக்கோட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 123 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications