சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தவெக கொடியுடன் வந்த நபர்.. 18 ஆம் படி அருகே அதிரடி காட்டிய போலீசார்
திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்தையொட்டி சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று சபரிமலையில் பக்தர் செய்த ஒரு காரியம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, சபரிமலைக்கு சென்ற ஒருவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கொடியை உயர்த்திப் பிடித்தபடி 18 ஆம் படி வரை சென்றார். இதைக் கவனித்த போலீசார், கொடியை கொண்டு செல்லக்கூடாது என்று எச்சரித்தனர்.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகளவில் பிரசித்தி பெற்றதாகும். இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

சபரிமலை மகரஜோதி
அந்த வகையில், இந்த சீசனுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் தேதி தொடங்கியது. 27 ஆம் தேதி முடிவுபெற்றது. மகரவிளக்கு பூஜை வைபவம் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் இன்று நடைபெற்றது. பொன்னம்பலமேட்டியில் ஜோதியே வடிவாக காட்சிதரும் ஐயப்பனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
தவெக கொடியுடன் வந்த பக்தர்
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இதனிடையே, சபரிமலையில் நேற்று பக்தர் செய்த ஒரு காரியம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சபரிமலைக்கு சென்ற ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை உயர்த்திப்பிடித்தபடி 18 ஆம் படி வரை சென்றார்.
எச்சரித்து அனுப்பிய போலீசார்
இதைக் கவனித்த போலீசார், கொடியை கொண்டு செல்லக்கூடாது. கொடியை மடக்கிவைத்து செல்ல வேண்டும் என்று எச்சரித்தனர். இதையடுத்து, அந்த நபர் தவெக கொடியை மடக்கி வைத்து 18 ஆம் படி ஏறிச் சென்றார். தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க விஜய் ஆயத்தமாகி வரும் நிலையில், தவெகவினர் ஆர்வமிகுதியால் கட்டுப்பாடு உள்ள பகுதிகளிலும் கூட தவெக கொடியை காட்டுவது, தவெகவிற்கு ஆதரவாக கோயிலுக்குள் பிரசாரம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது.
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள்ளும்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள், சாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்களிடம் சில இளைஞர்கள் தவெகவிற்கு ஓட்டு போடுமாறு வலியுறுத்தியதும், முருகன் கோயிலுக்குள் தவெகவிற்கு அரோகரா.. விஜய்க்கு அரோகரா என கோஷம் இட்டது அங்கிருந்த பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்செந்தூர் கோவில் நிர்வாகமும் காவல்துறையில் புகார் அளித்திருந்தது.
கோயில் வளாகத்தில் தடையை மீறிச் செல்போனில் வீடியோ எடுத்தது மட்டும் இன்றி ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக பக்தர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்லும் போதும் தவெக கொடியை அக்கட்சி தொண்டர் ஒருவர் தூக்கிச் சென்றது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications