கைக்கு பதில்.. வாயில் ஆபரேஷன்! அரசு மருத்துவரின் அலட்சியத்தால் 4 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்
திருவனந்தபுரம்: கேரளாவில் கை விரல்களில் ஆப்ரேஷன் செய்ய வந்த 4 வயது சிறுமிக்கு, மருத்துவர்கள் தவறுதலாக வாயில் ஆபரேஷன் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவீன மருத்துவம் மனித சமூகத்திற்கு மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. ஆனால், அதே நேரம் மருத்துவத்துறையில் ஏற்படும் தவறுகளை களைவதற்கு மருத்துவர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும், மருத்துவ தவறுகளால் மட்டும் உலகம் முழுவதும் 26 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது.

அதேபோல 13.8 கோடி நோயாளிகள் மருத்துவ தவறுகளால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் கேரளாவில் மற்றொரு மருத்துவ தவறு அரங்கேறியுள்ளது.
கேரளாவின் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் சமீபத்தில் 4 வயது சிறுமி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கையில் 6 விரல்கள் இருந்திருக்கின்றன. எனவே, ஒரு விரலை நீக்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் ஆபரேஷன் தியேட்டருக்குள் அழைத்து செல்லப்பட்டு, 2 மணி நேரம் கழித்து வெளியில் வந்த போது, சிறுமியின் வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டிருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், நர்ஸிடம் விசாரித்துள்ளனர். அப்போதுதான் சிறுமிக்கு கைக்கு பதில், வாயில் ஆபரேஷன் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக மருத்துவமனை அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கின்றனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், "எங்கள் மகளுக்கு கையில் 6 விரல்கள் இருந்தது. நீண்ட நாட்களாக இது எங்களுக்கு இடைஞ்சலாக இருந்தது. எனவே, மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டோம். சிறிய பிரச்னைதான் உடனே சரி செய்துவிடலாம் என்று அவர்கள் சொன்னார்கள். எனவேதான் ஆபரேஷனுக்கு ஓகே சொன்னோம். ஆனால் இப்போது கைக்கு பதிலாக வாயில் ஆபரேஷன் செய்திருக்கிறார்கள்.
இப்போது ஆறாவது விரல் அப்படியே இருக்கிறது. இந்த விஷயத்தை நான் நர்ஸிடம் சொன்னபோது அவர் சிரித்தார். எனக்கு இது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் இப்படி கவனக்குறைவாக நடந்து கொண்டதை ஏற்றுக்கொள்ளவே முடியாது" என்று கூறியுள்ளனர்.
இந்த தவறுக்கு மருத்துவமனை நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது. அதேபோல இது தொடர்பான விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறது. தவறிழைத்தவர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் இது போன்ற தவறுகள் நடப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் பெண்மணி ஒருவருக்கு ஆப்ரேஷன் செய்தபோது அவருடைய வயிற்றில் கத்திரிக்கோலை வைத்து தைக்கப்பட்டுவிட்டது. இப்படி தொடர்ச்சியாக மருத்துவ துறையில் தவறுகள் நடப்பது கவலை அளிப்பதாகவும், இவை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications