சபரிமலை சீசன்.. களை இழந்து போன எரிமேலி... ஐயப்ப பக்தர்கள் வருகை இல்லாமல் 'வெறிச்'
எரிமேலி (எருமேலி): கொரோனா கட்டுப்பாடுகளால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்து எரிமேலி நகரமும் வெறிச்சோடியதாக காணப்படுகிறது.
சபரிமலை செல்லும் பக்தர்கள் எரிமேலி சாஸ்தா கோவிலையும் வாபர் மசூதியையும் வழிபட்டுவிட்டு செல்வது வழக்கம். முதல் முறையாக சபரிமலைக்கு மாலை போட்டு செல்லும் கன்னிசாமிகள் கட்டாயம் எரிமேலி செல்வர்.

எரிமேலியில் வண்ண பொடிகள் பூசி பேட்டை துள்ளல் எனும் நடனமாடி சாஸ்தாவை வழிபடுவது மரபாகும். சபரிமலை சீசன் காலத்தில் எரிமேலி நகரம் தூங்கா நகரமாக ஐயப்ப பக்தர்கள் வருகையாலும் ஆட்டம் பாட்டங்களாலும் விழித்தே கிடக்கும்.
பேட்டை துள்ளலுக்கான வண்ண பொடிகள், இசைக்கருவிகள் விற்பனை செய்வதற்கான கடைகள் ஏராளமாக எரிமேலியில் நிறைந்து இருக்கும். ஆனால் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது.
மேலும் கொரோனா சான்றிதழுடன் நிலக்கல்லில் அனுமதி பெற வேண்டும் என்பதற்காக எரிமேலி வருவதை தவிர்ப்பதையும் பார்க்க முடிகிறது. சீசன் காலங்களில் வாகன நிறுத்தும் இடம், கடைகள் ஆகியவற்றுக்கான ஏலம் ரூ3 கோடி வரையில் போகுமாம். ஆனால் இம்முறை ரூ10 லட்சம் கூட வருவாய் வரவில்லையாம்.
பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு பக்தர்கள் வருகை இல்லாமல் எரிமேலி புண்ணிய தலம் வெறிச்சோடி கிடக்கிறது.












Click it and Unblock the Notifications