இப்படி தோத்து போயிட்டாரே.. அதான், சபதம் போட்டபடி மொட்டை அடிச்சிக்கிட்டேன்.. ஷாக் கொடுத்த டைரக்டர்
திருவனந்தபுரம்: "இப்படி இவர் தோத்து போயிடுவார்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. இருந்தாலும் சபதம் போட்டபடி என் தலையை மொட்டை அடிச்சிக்கிட்டேன்" என்று சினிமா டைரக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பாஜகவை எப்படியேனும் கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சபரிமலை விவகாரத்தை கொண்டு ஆட்சியை பிடிக்க எண்ணியது.
இதன்காரணமாக தடையை மீறி, இந்தவிவகாரம் குறித்தே பிரச்சாரங்களில் பேசி சர்ச்சைக்கு உள்ளானார்கள். இவ்வளவு செய்தும் அவர்களால் இந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் போய்விட்டது.

பாஜக அதிர்ச்சி
குறிப்பாக திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், திருச்சூர் போன்ற முக்கிய இடங்களில் ஒன்றைகூட பாஜக கைப்பற்றவில்லை. போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களும், பிரபலமானவர்களும், அனுபவம் மிக்கவர்களும்தான்!

அலி அக்பர்
மாநில அளவிலான பாஜகவின் இந்த தேர்தல் தோல்வியை பிரபல இயக்குனர் அலி அக்பரால் ஜீரணிக்க முடியவில்லை. அலி அக்பர், கிட்டத்தட்ட 20 திரைப்படங்களை இயக்கியவர். பல படங்களுக்கு பாடல்கள், வசனங்கள் எழுதி இருக்கிறார். தீவிர பாஜக விசுவாசியும்கூட.

சவால்
பிரச்சாரத்தின்போது, "திருவனந்தபுரத்தில் கும்மனம் ராஜசேகரன் தோல்வியடைந்தால் நான் மொட்டை அடிச்சுப்பேன்" என்று சவால் விட்டார். ஆனால் எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூரிடம் அவரும் தோல்வியைத்தான் தழுவினார். இதனால் ஏற்கனவே சவால்விட்ட டைரக்டர் அலி அக்பர் மொட்டை அடிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் துளைத்தெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

நிறைவேற்றிட்டேன்
இதையடுத்து, அலி அக்பர் மொட்டை அடித்துள்ளார். இது சம்பந்தமாக போட்டோ ஒன்றையும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், "கும்மனன் ராஜசேகரன் தோற்றுவிடுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. அவரது தோல்வி வருத்தம் தருகிறது. இருந்தாலும், நான் போட்ட சபதத்தை நிறைவேற்றி விட்டேன்" என்று பதிவிட்டுள்ளார். அலி அக்பர் மொட்டையடித்த போட்டோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications