தாண்டவமாடும் கொரோனா.. இழுத்துப் பூட்ட ரெடியாகும் கேரளா.. முழு ஊரடங்கு அமல்படுத்த முதல்வர் சூசகம்
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லாத உச்சம் பெற்று உள்ளதால், அங்கு முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவது பற்றி ஆலோசித்து வருவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தினமும் மாலையில் கேரள மாநிலத்தின் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான விவரங்களை செய்தியாளர்களுக்கு தெரிவிப்பது முதல்வர் பினராயி விஜயன் வழக்கம்.
புதன்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது இந்த தகவலை தெரிவித்தார்.

கேரளாவில் அதிகம்
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில், 1,038 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அந்த மாநிலத்தில் இதுவரை, இத்தனை பாதிப்புகள் ஒரே நாளில் பதிவானது கிடையாது. இதில் 226 கேஸ்கள் தலைநகர் திருவனந்தபுரத்தில் பதிவாகியுள்ளன. செயல்பாட்டில் உள்ள கேஸ்கள் எண்ணிக்கை 8,818.

நோயாளிகள் நிலை
ஒரே நாளில் பதிவானதில், 785 கேஸ்கள் உள்ளூர் மக்களின் போக்குவரத்து காரணமாக ஏற்பட்டவை. தற்போது கேரளாவில், 53 பேர் ஐசியு சிகிச்சையில் உள்ளனர். அதில் 9 பேர் வெண்டிலேட்டர் சிகிச்சை பிரிவில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 24 பேர் சுகாதார பணியுடன் தொடர்புடையவர்கள்.

கண்டறிதல்
57 பேருக்கு எப்படி பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. 51 புதிய இடங்கள் ஹாட்ஸ்பாட் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன கேரளாவில் மொத்த ஹாட்ஸ்பாட் எண்ணிக்கை 397. இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

முழு ஊரடங்கு
அப்போது லாக்டவுன் நடைமுறைக்கு வருமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பதிலளித்த அவர், நாங்கள் ஏற்கனவே மாநிலம் முழுக்க முழுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியிருந்தோம். இப்போதும் அது போன்ற சூழ்நிலை பற்றி யோசித்து வருகிறோம். இருப்பினும் இன்னமும் முடிவு எடுக்கவில்லை. அதுபற்றி முடிவெடுக்க வேண்டிய தேவை இருப்பதாக நினைக்கிறேன். இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications