குணா குகையில் விழுந்து உயிர் தப்பிய ரியல் ‛மஞ்சும்மல் பாய்ஸ்’ ஹீரோ தோல்வி.. கேரளா தேர்தலில் பரிதாபம்
திருவனந்தபுரம்: மலையாளத்தில் உருவான ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் சூப்பர் ஹிட் அடித்தது. மஞ்சும்மல் பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திரன் கொடைக்கானல் வந்து குணா குகையின் உள்ளே கடந்த 2006ம் ஆண்டு விழுந்ததையும், அவரை நண்பர்கள் பத்திரமாக மீட்டதையும் அடிப்படையாக வைத்து இந்த திரைப்படம் உருவானது. இந்நிலையில் தான் சுபாஷ் சந்திரன் கேரளா உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ‛மஞ்சும்மல் பாய்ஸ்'.. மலையாளம், தமிழ் உள்பட பல மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த திரைப்படம் என்பது கேரளாவின் மஞ்சும்மல் பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு நண்பர்கள் சுற்றுலா வருவார்கள். அப்போது ஒருவர் குணா குகையின் உள்ளே விழுந்துவிடுவார். அவரை நண்பர்கள் சேர்ந்து காப்பாற்றுவது தான் கதையாகும்.

இந்த திரைப்படம் உண்மையான கதையாகும். கடந்த 2006ம் ஆண்டில் செப்டம்பர் 3ம் தேதி சுபாஷ் சந்திரன் என்பவர் தனது நண்பர்களுடன் கொடைக்கானல் வருவார். சுபாஷ் சந்திரன் குகைக்குள் தவறி விழுந்த நிலையில் நண்பர்கள் காப்பாற்றி இருப்பார்கள். அதனை மையப்படுத்தி தான் ‛மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படம் உருவானது.
இந்நிலையில் தான் குணா குகைக்குள் உண்மையிலேயே விழுந்து மறுபிறவி எடுத்த சுபாஷ் சந்திரன் கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில் எர்ணாகுளம் மாவட்டம் எல்லூர் நகராட்சியில் உள்ள மாடபட்டு எனும் 27 வது வார்டில் போட்டியிட்டார். நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானது. இதி்ல சுபாஷ் சந்திரன் தோல்வியடைந்துள்ளார்.
இந்த வார்டில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். சுயேச்சையாக களமறிங்கிய மஞ்சு எம் மேனோன் 240 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். 2வது இடத்தை பாஜக வேட்பாளர் எஸ் ஷாஜி பெற்றார். அவர் 215 ஓட்டுகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளராக களம் கண்ட சுபாஷ் சந்திரன் 190 வாக்குகள் மட்டுமே பெற்று 3வது இடத்துக்கு சென்றார். இதன்மூலம் அவர் தோல்வியடைந்துள்ளார்.
தேர்தலில் தோல்வியடைந்த சுபாஷ் சந்திரன் அந்த பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். இருப்பினும் மக்களின் ஆதரவு அவருக்கு போதிய அளவு கிடைக்கவில்லை. தேர்தலுக்கு முன்பாக சுபாஷ் சந்திரன் வார்டில் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக சுபாஷ் சந்திரன், ‛‛ஏழைகளின் கஷ்டங்களை ஒரு ஏழையால் தான் புரிந்து கொள்ள முடியும். நான் சிறுவயது முதலே நிறைய பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். அதில் கிடைத்த அனுபவம் என்னை உறுதியான நபராக மாற்றி உள்ளது.
என் பெற்றோர் சாதாரண தொழிலாளர்கள். அவர்கள் காங்கிரஸ் கட்சியின் ஐஎன்டியூசி வர்த்த யூனியனில் இருந்தவர்கள். நானும் அதில் பணியாற்றி உள்ளேன். என் வாழ்க்கையில் துயர சம்பவம் நடந்த பிறகு என்னால் எடைகளை தூக்க முடியாது. இதனால் வெல்டிங் பணிகளை செய்தேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications