கேரளா நிகழ்ச்சியில் ஹமாஸ் தலைவர்.. பாஜக சொன்ன அந்த வார்த்தை.. பினராயி விஜயன் போட்ட உத்தரவு
திருவனந்தபுரம்: கேரளாவில் இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் தொடங்கி நடந்து வருகிறது. இதில் இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஹமாஸ் தாக்குதலை கண்டித்து இஸ்ரேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு தெரிவித்துள்ளார். அதேவேளையில் சுதந்திர பாலஸ்தீன நாடு அமைவது தான் இந்தியாவின் விருப்பம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது காசா நகரில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் கடந்த 27 ம் தேதி கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த தலைவர்களில் ஒருவரான காலித் மஷால் காணொளி காட்சி மூலம் பேசியது விவாதத்தை கிளப்பியத. கேரளாவின் மலப்புரத்தில் ஜமாத் இ இஸ்லாமியின் இளைஞர் பிரிவுகளில் ஒன்றாக கருதப்படும் சாலிடாரிட்டி இளைஞர் இயக்கம் சார்பில் நடந்த பேரணியில் அவர் காணொளியில் தோன்றி பேசியுள்ளார்.
அப்போது அவர், ‛‛நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து சியோனிஸ்டுகளை தோற்கடிக்க வேண்டும். அல் அக்ஸாவுக்காக போராடும் காசாவுக்காக ஒன்றிணைய வேண்டும்'' என பல விஷயங்களை பேசியதாக கூறப்படுகிறது. இதனை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் உள்பட பாஜகவை சேர்ந்த பல தலைவர்கள் கண்டித்துள்ளனர்.
இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதோடு நேற்று கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம், ஹமாஸ் அமைப்பின் தலைவர் பேச்சு உள்ளிட்டவற்றை ஒப்பிட்டு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பினராயி விஜயன் அரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் தான் ஹமாஸ் தீவிரவாத தலைவர் பேசிய விவகாரம் குறித்து இன்று கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதிலளித்ததாவது: ‛‛பாலஸ்தீன தலைவர் என்று குறிப்பிடப்படும் நபர் ஜமாத்-இ-இஸ்லாமியின் இளைஞர் பிரிவான சாலிடாரிட்டி யூத் இயக்கம் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அவர் என்ன சொன்னார் என்பதை நாம் பார்க்க வேண்டும். வெளியான வீடியோ என்பது ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.தவறு ஏதேனும் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' எனக்கூறினார். இதன்மூலம் சம்பவம் குறித்து விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications