57 பேர் பலி.. 1 லட்சம் பேர் வெளியேற்றம்.. 1300 மீட்பு முகாம்கள்.. கேரளாவை புரட்டி எடுத்த வெள்ளம்
கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்கு ஒரு வாரத்தில் 57 பேர் பலியாகி உள்ளனர்.
திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்கு ஒரு வாரத்தில் 57 பேர் பலியாகி உள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைய தொடங்கி உள்ளது. இந்த மழையால் கேராளாவும், மும்பையும்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.மும்பை, கேரளா, புனேவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
அதேபோல் தமிழகத்தில் கொங்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் கேரளாவில் மழை காரணமாக தொடர்ந்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
கேரளாவில் இயல்பு வாழ்க்கை
மொத்தமாக கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. கேரளாவில் தொடர் மழை போக போக அதிகரிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. கேரளாவில் வயநாடு, இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
பலி எண்ணிக்கை
இந்த நிலையில் தற்போது கேரளாவில் மழை காரணமாக நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. அதன்படி கடந்த நான்கு நாட்களில் மட்டும் வெள்ளம் காரணமாக கேரளாவில் இதுவரை 57 பேர் பலியாகி உள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மீட்பு முகாம்கள்
1318 மீட்பு முகாம்கள் கேரளாவில் அமைக்கப்பட்டு இருக்கிறது. வீடுகளை இழந்த 1,65,519 பேர் மீட்பு முகாம்களில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். 4 நாட்களில் கேரளாவில் 80 நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளது. கேரளாவில் மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய பகுதிகள்தான் மழை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
நிலச்சரிவு என்ன
கேரளாவில் மொத்தம் 8 மாவட்டங்கள் இப்படி நிலச்சரிவு காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. வயநாட்டில்தான் அதிகமாக மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மீட்பு முகாம்களிலும் அதிகமாக மக்கள் இங்குதான் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.